/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கமிஷனரிடம் 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனு
/
3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கமிஷனரிடம் 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனு
3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கமிஷனரிடம் 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனு
3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கமிஷனரிடம் 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனு
ADDED : பிப் 04, 2024 02:27 AM
தாம்பரம்:தன்னிச்சையாக செயல்படும், தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று, மாநகராட்சி கமிஷனரிடம், 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மனு கொடுத்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டல குழு தலைவராக இருப்பவர், ஜெயபிரதீப் சந்திரன். இந்த மண்டலத்தில், குழு தலைவரை சேர்த்து, மொத்தம், 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில், 3வது மண்டல குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று, தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள், 9 பேர் கையெழுத்திட்ட மனு, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனாவிடம், நேற்று முன்தினம் வழங்கினர்.
இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
3வது மண்டல குழு தலைவராக உள்ள ஜெயபிரதீப், தன்னிச்சையாக செயல்படுகிறார். கவுன்சிலர்களிடம் எதை பற்றியும் ஆலோசிப்பது இல்லை. தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில், எந்த பணியும் செய்யவில்லை. பொது மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முறையான டெண்டர் விடாமலும், மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் பல வேலைகள் செய்துள்ளனர். அதனால், மண்டல குழு தலைவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம். கமிஷனர் உடனடியாக கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரனிடம் கேட்டபோது,' என் மீது தவறான குற்றச்சாட்டை முன் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர். பல முறை மண்டல குழு கூட்டம் கூட்டப்பட்டும், பல கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தே வந்தனர். குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்,' என்றார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர்...
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, 40வது வார்டில் தி.மு.க., வில் 'சீட்' தராததால், ஜெயபிரதீப், அந்த வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதனால், தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்டார். 3வது மண்டல குழு தலைவர் தேர்தலில், கட்சி தலைமை அறிவித்த மகாலட்சுமியை எதிர்த்து, தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆதரவோடு, ஜெயபிரதீப் போட்டி யிட்டார்.
அதில், சில தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவோடு, 7 ஓட்டுகள் பெற்றார். பின், குலுக்கல் குறையில் 3வது மண்டல குழு தலைவராக ஜெயபிரதீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து, 3வது மண்டலத்தில், அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா என, இரண்டு கோஷ்டிகளிடையே தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. தங்கள் வார்டுகளை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.