/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி திறக்க அனுமதி கூடாது எனக்கோரி வழக்கு
/
சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி திறக்க அனுமதி கூடாது எனக்கோரி வழக்கு
சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி திறக்க அனுமதி கூடாது எனக்கோரி வழக்கு
சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி திறக்க அனுமதி கூடாது எனக்கோரி வழக்கு
ADDED : ஜன 14, 2025 12:44 AM

சென்னை, முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் மேற்கொள்ளாமல், சிந்தாதிரிப்பேட்டையில் அமையவிருக்கும் நவீன மீன் அங்காடியை திறக்க அனுமதிக்ககூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த, 'கிரீன் கேர்' என்ற அமைப்பின் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நகரில், பழமையான மீன் அங்காடி உள்ளது. 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ், தற்போது 14 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியும் ஒன்று.
தற்போதுள்ள, சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடிக்கு பதிலாக, 1,022 சதுர அடியில், 2.21 கோடி ரூபாய் செலவில், 102 கடைகளுடன் புதிய நவீன மீன் அங்காடி அமைக்கப்படுகிறது. ஆனால், அங்கு திடக்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்படவில்லை.
மீன் அங்காடியில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவால், சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவு நீருக்கு ஏற்ப, பெரியளவில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. முறையற்ற மீன் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
உரிய பாதுகாப்பு, சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, கடந்தாண்டு டிச.,4ல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் இல்லை.
மீன் கழிவு கூவம் நதியில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும்.
முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள், துாய்மை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுவெளியில் மீன்களை விற்க அனுமதிக்கக்கூடாது. துாய்மை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்.
இந்த வசதிகளை மேற்கொள்ளாமல், மீன் அங்காடியை திறக்க அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

