வழிப்பறி
திருடனுக்கு 'காப்பு'
ஓட்டேரி: புரசைவாக்கத்தில் பொதுமக்களிடம் கத்திமுனையில் ரவுடி ஒருவர் நேற்று முன்தினம் வழிப்பறி செய்வதாக, போலீசாருக்கு புகார் சென்றது. ஓட்டேரி போலீசாரின் விசாரணையில், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 'சொசைட்டி' தினேஷ், 30 என்ற சரித்திர பதிவேடு ரவுடி என்பது தெரியவந்தது. ஓட்டேரி போலீசார், தினேஷை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாலிபரை
தாக்கியவர் கைது
ஓட்டேரி: கொடுங்கையூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 23. இவர், நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி மேட்டுப்பாளையம் வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஓட்டேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், 43, என்பவர், டில்லிபாபு மீது இடித்துள்ளார். இதுதொடர்பாக தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் டில்லிபாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த டில்லிபாபு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், நேற்று கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
குறைதீர் முகாமில்
79 மனு ஏற்பு
ஆவடி: திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில், கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், கமிஷனர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து 79 மனுக்கள் பெற்று, அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
காரில் வந்த
புகையால் சலசலப்பு
ஆவடி : காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக 'டாட்டா சபாரி' காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வெள்ளச்சேரி அருகே வந்தபோது, காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. சுதாரித்த நரேஷ் குமார், காரில் இருந்து இறங்கினார். இச்சம்பவத்தால் வெளிவட்ட சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
பெண்ணை தாக்கிய
காதலன் கைது
ஆவடி: திருநின்றவூர், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் தரணிதரன், 29. இவரும், அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 5ம் தேதி இரவு, இளம்பெண்ணின் வீட்டிற்கு தரணிதரன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தரணிதரன் இளம்பெண்ணை தாக்கியுள்ளார். விசாரித்த பட்டாபிராம் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை நேற்று கைது செய்தனர்.