/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிய மூவர் கைது
/
அ.தி.மு.க., பிரமுகரை வெட்டிய மூவர் கைது
ADDED : பிப் 08, 2025 12:18 AM
திருமுல்லைவாயல், திருமுல்லைவாயில், பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர், 45; அ.தி.மு.க., 8வது வார்டு வட்டச் செயலர்.
இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன், எட்டியம்மன் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் ராஜசேகரை சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற, அவரது நண்பர்கள் கார்த்திகேயன், வினோத் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.
பலத்த காயமடைந்த ராஜசேகர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நண்பர் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், திருமுல்லைவாயில், வெங்கடாபுரத்தைச் சேர்ந்த முகேஷ், 34, மீஞ்சூரைச் சேர்ந்த பேய் முகேஷ், 23, மற்றும் சோழவரத்தைச் சேர்ந்த சுந்தர், 23, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் தெரியவந்ததாவது:
கடந்த டிச., 1ம் தேதி, முகேஷ் திருமுல்லைவாயில் உள்ள காலி மைதானத்தில் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த ராஜசேகர் மீது சேறும் சகதியும் பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ராஜசேகர், முகேஷின் கார் கண்ணாடியை உடைத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் முன் பகை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம், ராஜசேகர் மற்றும் அவரது நண்பர்களை, முகேஷ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி சென்றது தெரிய வந்தது.
திருமுல்லைவாயில் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.