தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்ட அ.தி.மு.க., ஜெயகுமார்
தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்ட அ.தி.மு.க., ஜெயகுமார்
ADDED : ஏப் 20, 2026 10:44 PM

ராயபுரம்: ராயபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமார், எம்.எல்.ஏ.,வாக ஆனதும் தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்பதை பட்டியலிட்டு, ஓட்டு சேகரித்து வருகிறார்.
வேட்பாளர் ஜெயகுமார் வாக்குறுதிகள்:
பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து தெருக்களிலும், 24 மணி நேரமும் எரியும் வகையில் மின் விளக்குகள் நிறுவப்படும். முக்கிய பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படும். அச்சத்தில் இருந்து பெண்கள் அழைத்தால், அடுத்த 10 நிமிடங்களில் போலீசார் அங்கு இருப்பர்.
பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்படும்; சட்டம் மற்றும் போதை பொருள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருவிழா நாட்களில், பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்காக, சிறப்பு காவல் படை ரோந்து பணியில் ஈடுபடும்.
தெருக்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில், தன்னார்வலர்கள் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பர். மொபைல் போனில் மூழ்கியுள்ள வாலிபர்களை மீட்க, விளையாட்டு, கலை, கலாசாரம் அடங்கிய சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
இளைஞர்கள் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்காக, ஒவ்வொரு வாரத்திலும் தொழில் பழகுநர் மையம், வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். துறைமுகம், ஐ.டி., நிறுவனங்கள், புத்தொழிலாக்க மையங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
