/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பண மோசடி வழக்கு மேலும் ஒருவர் கைது
/
பண மோசடி வழக்கு மேலும் ஒருவர் கைது
ADDED : ஜன 13, 2024 01:02 AM
ஆவடி, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன், 56. இவர், கடந்தாண்டு ஜூன் மாதம், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவில், பணம் மோசடி குறித்து புகார் செய்தார்.
அதில், அவரது நெருங்கிய நண்பர் மூலம் சாலிகிராமம், சத்யா கார்டனைச் சேர்ந்த சதீஷ், 55, குன்றத்துார், காந்தி நகரைச் சேர்ந்த சக்திவேல், 39, சிந்தாதிரிப்பேட்டை விஸ்வேஷ்வரர், 33, திருவாரூர் சுரேஷ், 35, மற்றும் திருச்சியைச் சேர்ந்த செல்வராஜ், 38, ஆகியோர் அறிமுகமாகினர்.
இவர்கள், ஒவ்வொரு துறையிலும் முக்கிய அரசு அதிகாரிகள் நெருக்கமாக உள்ளனர். அவர்கள் மூலம், அரசு வேலைகள் வாங்கி கொடுப்பதாக கூறினர். இதை நம்பி, என் மகன், மகள் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு, வேலை வாய்ப்பு குறித்து விசாரித்தேன். மின் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பாக உறுதி அளித்தனர். அதற்காக, என்னை சேர்ந்த 10 பேரிடம், நேரடியாகவும், வங்கி பரிவர்த்தனை வாயிலாகவும், 61.50 லட்சம் ரூபாய் பெற்றனர்.
அவர்களுக்கு, தமிழ்நாடு மின் வாரியத்தின் போலியான பணி நியமன ஆணையை வழங்கி, பணம் மோசடி செய்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்தாண்டு ஜூன் மாதம், சதீஷ், சக்திவேல், விஸ்வேஷ்வரர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சுரேஷ் மற்றும் செங்வராஜ் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று சுரேஷ் கைது செய்யப்பட்டார். செல்வராஜை தேடி வருகின்றனர்.