/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீரழியும் சாலையோர பூங்கா அழகுபடுத்த வேண்டுகோள்
/
சீரழியும் சாலையோர பூங்கா அழகுபடுத்த வேண்டுகோள்
ADDED : பிப் 13, 2024 12:43 AM

அமைந்தகரை, குப்பையால் சீரழிந்து வரும் சாலையோர பூங்காக்களை சீரமைத்து, அழகுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையை அழகுப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, 'சிங்கார சென்னை' திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், கழிப்பறைகளில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, கலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அதேபோல் சாலையோரங்களில் உள்ள சிறிய பூங்காக்களில் செடிகள், கண்கவரும் வகையில் விலங்குகளின் சிலைகள் அமைத்து அழகுப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், சில இடங்களில் சாலையோர பூங்காக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், பூங்கா இடங்கள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகின்றன.
அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை காவல் நிலையம் பின்புறத்தில், ஷெனாய் நகர் பெரிவரி சாலை மற்றும் கிரசன்ட் சாலை இணைப்பு பகுதியில், சாலையோர பூங்கா உள்ளது.
தற்போது இந்த பூங்கா, குப்பை மற்றும் பழைய பொருட்களை குவித்து வைக்கும் இடமாக மாறி, படுமோசமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாகவே, சாலையோர பூங்கா ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இங்கு சிறுநீர், மலம் கழிப்பது உள்ளிட்ட சீர்கேடு ஏற்படுகிறது.
தேவையில்லாத பொருட்கள், கட்டடக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு, படுமோசமாக உள்ளது. மற்ற இடங்களை போலவே, இந்த பூங்காவையும் சீரமைத்து அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.