ADDED : டிச 23, 2025 04:56 AM

'க ஜவதனா கருணா' என்ற ஸ்ரீ ரஞ்சனி ராக கிருதியை, பாபநாசம் அசோக் ரமணி படபடவென பாடியதும், திருவான்மியூர் ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அரங்கி னுள் கூடியிருந்தோருக்கு சரவெடியாக இருந்தது.
செவ்வாய் பகவானை வணங்கும் கிருதியை, மங்கள ராகமாக திகழும் சுருட்டியில் 'அங்காரகம் ஆஷ்ரயம்' என்பதை ஆலாபனையோடு துவங்கி, கற்பனை ஸ்வரங்களில் முடித்தார்.
பின், தேசாதி தாளத்தில், 72 மேளகர்த்தா ராகங்களில் ஒன்றான தேணுகா ராகத்தில் அமையப்பெற்ற, 'தெரியலேரு ராமா' என்ற கிருதியை ஆழ்ந்து பாடினார். அவரது குரலில் பக்தி மனம் வீசியது. அடுத்து, பந்துவராளி ராகத்தில், 'நின்னருள் இயம்பலாகுமோ' என்ற கிருதிக்கு, ராகத்தை ஆலாபனையாக வழங்கினார். இந்த இடத்தில், வயலின் இசையில் மெய்சிலிர்க்க வைத்தார் நாகை முரளிதரன்.
'இன்னல் கூட்டி இன்பமூட்டி, இந்தரஜால வித்தை காட்டி' என்ற சரண வரிகளுக்கு, அசோக் ரமணி நிரவல் சேர்க்க, சபையினர் மனதில், அல்லாடும் மனித பிறவிக்கு சற் று ஓய்வு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது.
முக்கிய உருப்படியாக 'ஸ்வர ராக சுதா' என்ற தியாகராஜரின் சங்கராபரண கிருதியை, ராக ஆலாபனை, சரணப் பகுதியில் துாவி காலங்களில் நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கணக்கு கோர்வைகள் என, கணகச்சிதமாக வழங்கினார்.
தனி ஆவர்த்தன பகுதியில் மிக சிறப்பாக இசையை கையாண்டனர் மிருதங்கத்தில் வைத்தியநாதனும், கஞ்சிராவில் வெங்கடராமனும்.
இறுதியாக , தஞ்சாவூர் சங்கர் அய்யர் இயற்றிய 'மனதிற்கு கந்தது முருகன் ரூபம்' என்ற கிருதியை பாடி, முருக பக்தியோடு கச்சேரியை நிறைவு செய்தார்.
- ரா.பிரியங்கா

