/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பது... நிறுத்தி வைப்பு எதிர்ப்பு காரணமாக 22 மண்டலங்களாக அதிகரிக்கிறது
/
சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பது... நிறுத்தி வைப்பு எதிர்ப்பு காரணமாக 22 மண்டலங்களாக அதிகரிக்கிறது
சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பது... நிறுத்தி வைப்பு எதிர்ப்பு காரணமாக 22 மண்டலங்களாக அதிகரிக்கிறது
சட்டசபை தொகுதி வாரியாக மண்டலம் பிரிப்பது... நிறுத்தி வைப்பு எதிர்ப்பு காரணமாக 22 மண்டலங்களாக அதிகரிக்கிறது
ADDED : ஏப் 06, 2025 12:14 AM

சென்னை மாநகராட்சியில் 20 மண்டலங்களாக பிரிப்பதற்கு கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்ததால், இம்முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்துவரும் சட்டசபை கூட்டம் முடிந்த பின், சட்டசபை தொகுதிக்கு ஒன்று என, 22 மண்டலங்களாக அதிகரிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய, 10 மண்டலமாக செயல்பட்டது.
நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 2011ல் புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 426 சதுர கி.மீ., பரப்பில், சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் உடைய மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன; ஆனால், 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே, சென்னை மாவட்டத்தில் உள்ளன.
மற்ற சட்டசபை தொகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இதனால், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன.
தற்போதைய சூழலில், ஒரு சட்டசபை தொகுதி, இரண்டு அல்லது மூன்று மண்டலங்களில் உள்ளது. அங்கு, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., மேம்பாட்டு நிதி பகிர்ந்தளித்து பணியாற்றுவதில் சிக்கல் உள்ளது.
அதேபோல், தங்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு, மூன்றுக்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்களை வரை தொடர்பு கொண்டு பேச வேண்டியுள்ளது.
இதனால், சட்டசபை தொகுதியின் வளர்ச்சி ஒருசேர இல்லை என்ற குற்றச்சாட்டை, எம்.எல்.ஏ.,க்கள் முன்வைக்கின்றனர்.
தவிர, சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகை ஒரு கோடியை கடந்திருப்பதால், நிர்வாக சிக்கல்களை தீர்க்க, 22 சட்டசபை தொகுதிகளையும் உள்ளடக்கி, மண்டலங்கள் பிரிக்கும் பணி நடந்தது.
அதன்படி, மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
அதில் நிர்வாக வசதிக்காக, சட்டசபை தொகுதி வாரியாக, 20 மண்டலங்கள் பிரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 22 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி மண்டலங்கள் பிரிக்கப்பட்டாலும், மீண்டும் ஒருசேர சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில் மண்டலங்கள் பிரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் எழுப்பினர். புதிதாக பிரிக்கப்பட்டதிலும், ஒரு சட்டசபை தொகுதி, மூன்று அல்லது நான்கு மண்டலங்களில் வருகின்றன.
அத்துடன், பெருங்குடி, சோழிங்கநல்லுார், அடையாறு, மணலி உள்ளிட்ட மண்டலங்கள் மறுவரையறை செய்யப்படும் போது, மண்டல குழுக்களில் மாற்றம் ஏற்படும். இதனால், ஒரு மண்டல தலைவர் பதவி பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மணலி மண்டலத்தை கலைத்து, மற்ற மண்டலங்களில் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்கு தி.மு.க., --- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல், தங்களது தொகுதி வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, மூன்று அல்லது நான்கு மண்டல உதவி அலுவலர்களிடமும் பேச வேண்டுமா என, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனால், மண்டலங்கள் பிரிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:
மண்டலங்கள் பிரிப்பு தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். எனவே, சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிப்பு பணி, மறுசீராய்வு அடிப்படையில் நடைபெற உள்ளது.
இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், சென்னை மாநகராட்சியின் மண்டலம் பிரிப்பு பணி நடக்கும். அப்போது, 15 ஆக உள்ள மண்டலங்கள், 22 ஆக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசிக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையில் மாற்றங்களும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -