/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டியும் பிரசவ வார்டு செயல்படவில்லை
/
தாம்பரம் ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டியும் பிரசவ வார்டு செயல்படவில்லை
தாம்பரம் ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டியும் பிரசவ வார்டு செயல்படவில்லை
தாம்பரம் ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டியும் பிரசவ வார்டு செயல்படவில்லை
ADDED : பிப் 04, 2024 05:22 AM
தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாத புரத்தில், 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஏழு வருடங்கள் ஆகியும், பிரசவ வார்டு அமைக்கப்படாததால், ஏழை கர்ப்பிணி பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, ரங்கநாத புரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ரங்கநாதபுரம், கடப்பேரி, கஸ்துாரி பாய் நகர், மேற்கு தாம்பரம், புலிகொரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினசரி, 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்களுக்காக வந்து செல்கின்றனர்.
இதில், கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு, பொது, மகப்பேறு, குழந்தை நலன், கண், பல், தோல், முடநீக்கு இயல், மன நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த மருத்துவர்கள், வாரம்தோறும் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர்.
பழமையான, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகமாக வரும் கர்ப்பிணி பெண்கள், பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை அல்லது எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். அதனால், ஏழை மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், ஏழை மக்களின் வசதிக்காக, இங்கேயே தாய்சேய் மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2016ல், சின்னையா, அமைச்சராக இருந்த போது, 15 லட்சம் ரூபாய் செலவில் தாய்சேய் கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.
இந்த கட்டடத்தில், 15 படுக்கை, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் பிரசவ வார்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பிரசவ வார்டு அமைக்கப்படவில்லை. வழக்கம் போல், கர்ப்பிணி பெண்கள், பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை, எழும்பூருக்கு அனுப்பப்படுகின்றனர்.
அதேபோல், இக்கட்டடத்தில் சோலார் வசதியும் அமைக்கப்பட்டது. அதுவும் செயல்படவே இல்லை. மொட்டை மாடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது. அதுவும், செயல்படவே இல்லை. மொத்தத்தில், இம்மருத்துவமனையை மேம்படுத்த அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, இம்மருத்துவமனையை ஆய்வு செய்து, பிரசவ வார்டு அமைத்து, அதற்கு மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களை நியமிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், சோலார் ஆகியவை இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.