ADDED : ஏப் 06, 2026 10:13 PM
எழும்பூர்:ஆட்டோவில் சவாரி வந்த வடமாநில வாலிபர்களிடம், கத்தி முனையில் இரண்டு மொபைல் போன்களை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சூளை பகுதியில் உள்ள அலுமினிய விற்பனை கடையின் மேலாளர் முனியசாமி, 38. அதே கடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரண், மோண்டி, புனாபாடி ஆகியோர் பணிபுரிகின்றனர்.
கடந்த 3ம் தேதி அதிகாலை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஊழியர்கள் மூவரும், சூளை பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தனர். வழியிலேயே மோண்டி என்பவர் இறங்கிவிட, மற்ற இருவரும் ஆட்டோவில் பயணித்தனர். ஆட்டோ வேப்பேரி அடுத்த ரித்தர்டன் சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரும் அவருடன் இருந்த நண்பரும் கத்தியை காட்டி மிரட்டி, இரண்டு மொபைல் போன்களை பறித்துச் சென்றனர்.
எழும்பூர் போலீசாரின் விசாரைணயில், அம்பத்துாரைச் சேர்ந்த நாகராஜ், 28, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மணிமாறன், 37 ஆகியோர், கத்தி முனையில் மொபைல் போன்களை பறித்துச் சென்றது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல்போன்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
