ADDED : பிப் 16, 2024 12:25 AM
பூக்கடை, பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக, பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன. பூக்கடை, தங்கசாலை தெருவில், 400 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோவிலுக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வர்.
விழாக்காலங்களில், கூட்டம் கட்டுக்கடங்காது. இந்நிலையில், கோவில் புனரமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதன்படி, நேற்று காலை பாலாலயம் பூஜைகள் நடைபெற்றன. விஷேச யாகம் வளர்க்கப்பட்டு, கலசத்தில் அத்திமரம் மூலவராக நிர்மாணிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கோவிலில் உள்ள தெய்வச் சிலைகள் துணியால் மூடி வைக்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும், கோவிலுக்கு நன்கொடை அளிப்பவர்கள் வசதிக்காக, 'கியூ.ஆர்.கோடு' வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நற்சோணை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.