/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
/
பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
பொறியியல் அதிசயம்... ரிவர்ஸில் வரும் தண்ணீர்! ரூ.62 கோடி கொட்டியும் வீண் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
ADDED : ஆக 28, 2025 02:14 AM

வேளச்சேரி,
வெள்ள பாதிப்பை தடுக்க 3.5 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்ட மூடு கால்வாயில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதால், மீண்டும் வேளச்சேரி வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. திட்டமிடலின்றி கட்டப்பட்ட இந்த மூடுகால்வாயால், 62 கோடி ரூபாய் வீணானதே மிச்சம் என, வேளச்சேரி மக்கள் குமுறுகின்றனர்.
வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக வேளச்சேரி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீரோட்டம் தடைபட்டதால், 2002 மற்றும் 2015ல் வீடுகளின் ஒரு மாடி வரை வெள்ளத்தில் மூழ்கின.
ஜெயலலிதா உத்தரவு
மழையின்போது, வேளச்சேரி ஏரி உபரி நீர் கால்வாயில் செல்லும் வெள்ளம், சதுப்பு நிலத்தில் உள்வாங்காததே வெள்ள பாதிப்பிற்கு பிரதான காரணமாக இருந்தது.
இதற்கு தீர்வு காண, 2005ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வேளச்சேரி உபரி நீர் கால்வாயில் இருந்து பகிங்ஹாம் கால்வாய்க்கு, 'இணைப்பு மூடு கால்வாய்' கட்ட உத்தரவிட்டார்.
இதையடுத்து, உபரி நீர் கால்வாயின் விஜயநகர் சந்திப்பில் இருந்து, தரமணி நுாறடி சாலை வழியாக பகிங்ஹாம் கால்வாய் வரை, 3.5 கி.மீ., நீளத்திற்கு, 18 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மூடு கால்வாய் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, 35 கோடி ரூபாய் ஒதுக்கி, 2011ல் பணிகள் துவங்கின.
டி.சி.எஸ்., சந்திப்பு அருகில், பாறை இருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, மீண்டும் 27 கோடி ரூபாய் ஒதுக்கி மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஆமை வேகத்தில் நடந்தன.
நிலைமை தலைகீழ்
இந்நிலையில், 2016ம் ஆண்டு, 'ஜீரோ பாயின்ட்' பகுதியான விஜயநகர் சந்திப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட பூஜை போட்டதால், மூடு கால்வாய் பணி அவசரகதியில் முடிக்கப்பட்டது.
வேளச்சேரி - -தரமணி சாலையின் இருபுறமும் உள்ள, 4 அடி அகல வடிகாலும், இந்த மூடு கால்வாயுடன் இணைக்கப்பட்டது.
இந்த மூடுகால்வாய் வழியாக, வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வடியும் 60 சதவீத மழைநீர், பகிங்ஹாம் கால்வாயை அடைய வேண்டும்.
ஆனால், நிலைமை தலைகீழானது. மூடு கால்வாயில், 20 சதவீதம் வெள்ளம் மட்டும் பகிங்ஹாம் கால்வாய் சென்றது.
கடந்த 2021ல், இந்த கால்வாயை மழைக்கால சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், வெள்ளம் பின்னோக்கி பாய்வதை கண்டறிந்து, அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர்.
அதன்பின், எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால், அடுத்தடுத்த பருவமழையில் வெள்ள பாதிப்புக்கு இந்த மூடு கால்வாயில் பின்னோக்கி பாயும் வெள்ளம், முக்கிய காரணமாக உள்ளது.
'வெள்ளச்சேரி'
இது குறித்து, வேளச்சேரி, நலச்சங்க நிர்வாகி குமாரராஜா கூறியதாவது:
எந்த நோக்கத்திற்காக மூடு கால்வாய் கட்டப்பட்டதோ, அது நிறைவேறவில்லை. மக்கள் வரிப்பணித்தில், 62 கோடி ரூபாய் வீணடித்ததை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. தற்போது, உட்புற சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வரும் பருவமழைக்கும், வேளச்சேரி என்பது வெள்ளச்சேரியாக மாறுவது நிச்சயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.