ADDED : மார் 07, 2024 12:36 AM
சூளைமேடு, -சென்னை, சூளைமேடு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட விலை உயர்ந்த சைக்கிள்கள் திருடுபோயின.
இதுகுறித்த புகாரை விசாரித்த சூளைமேடு போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், வாலிபர் ஒருவர் சைக்கிள் திருடுவது தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு சூளைமேடு பகுதியில், போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அங்கு சைக்கிளுடன் வந்த வாலிபர் ஒருவர், போலீசை கண்டதும் தப்பிக்க முயற்சித்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில், சூளைமேடு, காந்தி சாலையைச் சேர்ந்த சதீஷ், 31, என்பதும், அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில், விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி, அவற்றை அண்ணா நகரில் ஹோட்டல்களில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்களுக்கு, 500 முதல் 1,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அந்த பணத்தில் மது குடித்துள்ளார். மேலும் அவர் இதுவரை, 12 சைக்கிள்களை திருடி விற்றது தெரிந்தது.

