/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியை குறிவைக்கும் பா.ஜ.,: இப்போதே களமிறங்கிய பிரபலங்கள்
/
வேளச்சேரியை குறிவைக்கும் பா.ஜ.,: இப்போதே களமிறங்கிய பிரபலங்கள்
வேளச்சேரியை குறிவைக்கும் பா.ஜ.,: இப்போதே களமிறங்கிய பிரபலங்கள்
வேளச்சேரியை குறிவைக்கும் பா.ஜ.,: இப்போதே களமிறங்கிய பிரபலங்கள்
UPDATED : மே 26, 2025 06:57 AM
ADDED : மே 25, 2025 08:29 PM

சென்னை: தமிழத்தில் பா.ஜ.,வுக்கு கன்னியாகுமரி, கோவைக்கு அடுத்தபடியாக, தென் சென்னையில் கணிசமான ஓட்டுவங்கி உள்ளது.
தென் சென்னை தொகுதியில், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., - பா.ம.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் கவர்னர் தமிழிசை, 26.82 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றார். அதாவது, 2 லட்சத்து, 90,683 ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது. தே.மு.தி.க.,வுடன் கைகோர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.,வின் ஜெயவர்த்தனுக்கு, 15.92 சதவீதம், அதாவது, 1 லட்சத்து, 72,491 ஓட்டுகளே கிடைத்தன.
ஆறு சட்டசபை தொகுதிகளில், சோழிங்கநல்லுாரில், 81,555, வேளச்சேரியில், 51,353, தி.நகரில், 45,206, விருகம்பாக்கத்தில், 43,528, மயிலாப்பூரில், 38,944, சைதாபேட்டையில் 28,643 ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைத்தன. இதனால் வரும் சட்டசபை தேர்தலில், தென்சென்னையில் இரு சட்டசபை தொகுதிகளை, அ.தி.மு.க.,விடம் கேட்டு பெற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதனால் வேளச்சேரி, தி.நகர், விருகம்பாக்கம் தொகுதிகளை, பா.ஜ., நிர்வாகிகள் குறிவைத்துள்ளனர். குறிப்பாக, வேளச்சேரி தொகுதிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் கவர்னர் தமிழிசை, பா.ஜ., மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன், மாநில செயலர்கள் எஸ்.ஜி.சூர்யா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் வேளச்சேரி தொகுதியை குறிவைத்து பணிகளை துவங்கி உள்ளனர்.
தமிழிசை
கடந்த 2011ல், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை, 4.63 சதவீதம் அதாவது, 7,048 ஓட்டுகளை பெற்றார். கடந்த 2016ல், அவர் தான் வசிக்கும் சாலிகிராமத்தை உள்ளடக்கிய விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 11.19 சதவீதம் அதாவது, 19,167 ஓட்டுகள் பெற்றார்.
ஆனாலும், விருகம்பாக்கத்தைவிட தி.நகர், வேளச்சேரி பாதுகாப்பானது என தமிழிசை கருதுவதாகவும், தி.நகரை அ.தி.மு.க., விட்டுத்தராது என்பதால், வேளச்சேரியை குறிவைப்பதாகவும் பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அதனால், தொகுதியில் நிர்வாகிகளை சந்திப்பது, அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, இப்போதே தமிழிசை கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
பா.ஜ., மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன், 2016ல் வேளச்சேரியில் போட்டியிட்டு, 8.25 சதவீதம் அதாவது, 14,472 ஓட்டுகள் பெற்றார். அதன்பின், வேளச்சேரி தொகுதியில் தன் அலுவலகத்தை அமைத்து, நல திட்ட உதவிகள் உள்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
மாநில செயலர் சூர்யாவும் வேளச்சேரியை குறிவைத்து பணியாற்றி வருகிறார். இதனால், வேளச்சேரி தொகுதிக்கு இப்போதே பா.ஜ.,வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.