/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம்
/
பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம்
பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம்
பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம்
ADDED : ஏப் 12, 2025 09:45 PM
சென்னை:திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோத்சவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலை அங்குரார்ப்பணம், சேனை முதன்மையார் நிகழ்வு நடந்தது. இன்று காலை 8:45 மணி முதல் 9:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது.
நாளை காலை 6:15 மணிக்கு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி நடக்கிறது. அன்று இரவு 7:45 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நடக்கிறது.
விழாவின் மூன்றாம் நாளாளான, 15ம் தேதி, காலை 5:15 மணிக்கு கோபுர தரிசனதுடன் கருட சேவை உத்சவம் நடக்கிறது. அன்று நண்பகல் 12:00 மணிக்கு ஏகாந்த சேவையும், இரவு 7:45 மணிக்கு அம்ச வாகன புறப்பாடு நடக்கிறது.
வரும், 16ம் தேதி காலை சூரிய பிரபையும், இரவு சந்திரபிரபை புற்பாடும் நடக்கிறது. நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவை, 17ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8:30 மணிக்கு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.
ஆனந்த விமான புறப்பாடு, வரும் 18ம் தேதி காலை நடக்கிறது. அன்று இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான, வரும் 19ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படுகிறது.
பல்லக்கு-வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 20ம் தேதி காலை 6:15 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு 8:15 மணிக்கு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
வரும், 21ம் தேதி காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு 7:45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது.
தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.
மே 23 முதல் மே 30 வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.