பகிங்ஹாம் - உத்தண்டி வரை மூடுகால்வாய் திட்டம்...பலன் இருக்குமா?
பகிங்ஹாம் - உத்தண்டி வரை மூடுகால்வாய் திட்டம்...பலன் இருக்குமா?
UPDATED : ஆக 09, 2025 08:29 AM
ADDED : ஆக 08, 2025 11:40 PM

சென்னை, தென் சென்னையில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு பகிங்ஹாம் கால்வாயில் இருந்து உத்தண்டி கடற்கரை வரை அமைக்கப்பட உள்ள மூடுகால்வாயால் எந்த பலனும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாத்தியக்கூறு ஆராயாமல், இப்பணிகளுக்கு, 91 கோடி ரூபாயை நீர்வளத் துறைக்கு நிதித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் சென்னையில் உள்ள 61 ஏரிகளிலிருந்து நிரம்பி வெளியேறும் உபரிநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகிறது. அங்கிருந்து வினாடிக்கு 8,500 கனஅடி வெள்ளநீர் வெளியேறி, ஒக்கியம் மடுவு வழியாக தெற்கு பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது. இக்கால்வாயில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி நீரை மட்டுமே வங்க கடலுக்கு அனுப்ப முடியும்.
தெற்கு பகிங்ஹாம் கால்வாய் 24 கி.மீ., நீளம் உடையது. அதில், ஒக்கியம் மடுவு 10.5 கி.மீ.,யில் வந்து இணைகிறது. இங்கிருந்து வெள்ளநீர், கடல்நீரை அடைவதற்கு 13.5 கி.மீ., பயணிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிகப்படியாக தண்ணீர் சென்றால், தெற்கு பகிங்ஹாம் கால்வாயின் பகுதிகளான வேளச்சேரி, ராம்நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், வெள்ளநீர் அதிகளவில் தேங்கி பாதிப்பு ஏற்படும்.
இதை தடுக்க, உத்தண்டி கடல்சார் பல்கலை அருகில் இருந்து 2 கி.மீ.,க்கு மூடுகால்வாய் அமைத்து கிழக்கு கடற்கரை சாலையை கடந்து, வங்க கடலில் வெள்ளநீர் கொண்டு சேர்க்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 500 கனஅடி நீரை வெளியேற்றலாம் என, நீர்வளத்துறை கணக்கு போட்டுள்ளது. இந்த கால்வாய் அமைக்கும் பணிக்காக நீர்வளத் துறைக்கு 91 கோடி ரூபாயை, நிதித்துறை வழங்கியுள்ளது.
கால்வாய் அமைக்கும் பணியை, இரு நாட்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்துள்ளார். ஆனால், இந்த கால்வாய் வாயிலாக, தென்சென்னை பகுதிகளில் வெள்ளநீர் வடிவதற்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.
முறையாக சாத்தியக்கூறுகளை ஆராயாமல், நீர்வளத்துறை நிதி பெற்றுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கறாராக கணக்கு பார்க்கும் நிதித்துறை உயர் அதிகாரிகள், இவ்விஷயத்தில் ஏமாந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
