/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் வளாகம், வடிகால், சாலை பணிகளுக்கு...-ரூ.1,200 கோடி! நாய் கட்டுப்பாட்டு மையம் அதிகரிக்க முடிவு
/
பஸ் வளாகம், வடிகால், சாலை பணிகளுக்கு...-ரூ.1,200 கோடி! நாய் கட்டுப்பாட்டு மையம் அதிகரிக்க முடிவு
பஸ் வளாகம், வடிகால், சாலை பணிகளுக்கு...-ரூ.1,200 கோடி! நாய் கட்டுப்பாட்டு மையம் அதிகரிக்க முடிவு
பஸ் வளாகம், வடிகால், சாலை பணிகளுக்கு...-ரூ.1,200 கோடி! நாய் கட்டுப்பாட்டு மையம் அதிகரிக்க முடிவு
ADDED : டிச 31, 2024 12:28 AM

சென்னை, சென்னை பிராட்வேயில் பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகம், மழைநீர் வடிகால், பாலம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள், 1,200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, புதிதாக பல இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில தீர்மானங்கள்:
பிராட்வே பேருந்து நிலையத்தில், குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகம், 822.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதில், மாநில நகர்புற உள்கட்டமைப்பு நிதியின் கீழ், 506.83 கோடி ரூபாய் கடனாக பெற, மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது
ஓட்டேரி கால்வாயின் குறுக்கே, நியூ பேரன்ஸ் சாலையில் தற்போதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுதல், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே, கோ.சு.மணி சாலையில், தற்போது உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுதல் உள்ளிட்ட ஆறு இடங்களில், 39.98 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது
அண்ணா நகர் மண்டலத்தில், அம்பேத்கர் சாலை சந்திப்பு, கான்ஸ்டேபல் சாலை உள்ள ஐ.சி.எப்., கால்வாய் உள்ளிட்ட இடங்களில் புதிதாக, ஆறு இடங்களில், 31.43 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது
சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள, 386 'அம்மா' உணவகங்கள், 18.08 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன
சென்னை மாநகராட்சியில் உள்ள, 1,669 எண்ணிக்கையிலான உட்புற மற்றும் பேருந்து தட சாலைகள், 31 எண்ணிக்கையிலான சிமென்ட் சாலைகள், 290 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது.
இதில், 90 கோடி ரூபாய் மாநகராட்சியும், 200 கோடி ரூபாய் கடன் அல்லது மானியம் பெற்று சீரமைக்கப்படும். அதன்படி, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது
இதுதவிர, 8,340 எண்ணிக்கையிலான சாலைகளில் உள்ள பழைய பெயர் பலகையை நீக்கி, புதிதாக டிஜிட்டல்பெயர் பலகை அமைக்கப்பட உள்ளது
சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சிசார்பில் புளியந்தோப்பு, கண்ணாம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய ஐந்து இடங்களில், நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன.
மேலும், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், பெருங்குடி என, ஐந்து மண்டலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர், தண்டை யார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், அடையாறு மண்டலங்களிலும், நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
சென்னையில் அனுமதியற்ற இண்டர்நெட் எனும் இணைய கம்பங்களுக்கு, 1 லட்சம் ரூபாய்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக அமைத்த கம்பத்திற்கு, 75,000 ரூபாய்; ஒழுங்கற்ற முறையில் அமைத்திருந்தால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
சென்னை கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள், சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் அமைக்கப்படும்
மாநகராட்சி பள்ளியில் தற்காலிக முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம்,11,970 ரூபாயிலிருந்து, 14,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயாக்களுக்கான சம்பளம், 8,850 ரூபாயிலிருந்து, 10,450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.