/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதிய அளவில் இயக்கப்படாத '11ஜி' கால்கடுக்க காத்திருக்கும் பஸ் பயணியர்
/
போதிய அளவில் இயக்கப்படாத '11ஜி' கால்கடுக்க காத்திருக்கும் பஸ் பயணியர்
போதிய அளவில் இயக்கப்படாத '11ஜி' கால்கடுக்க காத்திருக்கும் பஸ் பயணியர்
போதிய அளவில் இயக்கப்படாத '11ஜி' கால்கடுக்க காத்திருக்கும் பஸ் பயணியர்
ADDED : பிப் 17, 2024 12:30 AM
கே.கே.நகர், சென்னை கே.கே.நகர் எனும் கலைஞர் நகர் பணிமனையில் இருந்து பிராட்வேக்கு தடம் எண்: '11ஜி' மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. கே.கே.நகரில் இருந்து சென்னையின் வர்த்தக பகுதியான தி.நகர், அண்ணா சாலை எல்.ஐ.சி., வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பிராட்வே செல்கிறது.
சென்னையின் பிரதான பகுதிகள் வழியாக இந்த பேருந்தின் வழித்தடம் இருப்பதால், எந்நேரமும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கொரோனா தொற்று பரவல் காலகட்டத்திற்கு முன், 15 நிமிடங்களுக்கு ஒன்று என, 11ஜி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், கொரோனா கட்டுக்குள் வந்தபின் பேருந்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என அறிவிப்பு வெளியிட்ட பின், ஒரு நாளைக்கு 15 நடைக்கு குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், இந்த பேருந்திற்காக மணிக்கணக்கில் பயணியர் கால்கடுக்க காத்திருக்கும் அவலம் தொடர்வதாக, பயணியர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலனை கருத்தில் வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, பயணியர் கூறியதாவது:
தி.நகர், சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதால், '11ஜி' பேருந்தில் அதிகமானோர் பயணம் செய்வர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், கூட்டம் அதிகமாக இருந்தாலும் பேருந்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததில்லை. தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. 'கால்டாக்ஸி, பைக் டாக்ஸி' உள்ளிட்டவற்றிற்காக, அதிகாரிகள் இந்த பேருந்தை முடக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல இரவில் 9:30 மணிக்கு மேல் பேருந்துகள் இருக்காது. குறிப்பாக, பெண்கள் ஆட்டோ உள்ளிட்ட மாற்று போக்குவரத்தில், அவர்கள் கேட்கும் கட்டணத்தை கொடுத்து பயணிக்க வேண்டி அவலநிலை உள்ளது.
குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற அளவிலே இயக்கப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.