/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டீ கடை முதல் 'ஸ்டார்' ஹோட்டல் வரை வியாபாரம் பாதிப்பு! 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடால் மன உளைச்சல்
/
டீ கடை முதல் 'ஸ்டார்' ஹோட்டல் வரை வியாபாரம் பாதிப்பு! 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடால் மன உளைச்சல்
டீ கடை முதல் 'ஸ்டார்' ஹோட்டல் வரை வியாபாரம் பாதிப்பு! 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடால் மன உளைச்சல்
டீ கடை முதல் 'ஸ்டார்' ஹோட்டல் வரை வியாபாரம் பாதிப்பு! 'காஸ்' சிலிண்டர் தட்டுப்பாடால் மன உளைச்சல்
UPDATED : மார் 11, 2026 09:03 AM
ADDED : மார் 11, 2026 05:49 AM

சென்னை: சென்னையில் வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் பாதிப்பால், டீ கடை முதல், 'ஸ்டார்' ஹோட்டல் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
நிலைமையை எப்படி சமாளிப்பது என தெரியாமல், மன உளைச்சலில் இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, ஈரான் மீ து நடத்தி வரும் தாக்குதலால், கப்பல்களில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தை, நேற்று முன்தினம் முதல், எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
இதனால், சிலிண்டர் கிடைக்காததால், சென்னையில் டீ கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
நிலைமையை சமாளிக்க முடியாமல் சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என, அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் தலைவர் ரவி கூறியதாவது:
வழக்கமாக, சிறிய ஹோட்டல்கள் தினசரி தேவைக்கும், பெரிய ஹோட்டல்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு சேர்த்தும் காஸ் சிலிண்டர்களை வாங்குகின்றன. வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், பல சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
பெரிய ஹோட்டல்களில் நாளை முதல் சாப்பாடு, வடை விற்பனை நிறுத்தப்படும். இதேபோல், பல உணவு வகைகள் விற்பதும் குறைக்கப்படும்.
இதற்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க, தலைமை செயலர் தலைமையில், இன்று தமிழக அரசு கூட்டம் நடத்த உள்ளது. அதில், ஹோட்டல் தொழிலை காப்பாற்ற வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஐ.டி., ஊழியர்கள் தங்கியுள்ள விடுதிகளின் உரிமையாளர்கள் கூறுகையில், 'டீ, காபி வினியோகம் செய்யப்படாது. தோசை, சப்பாத்தி தற்காலிகமாக நிறுத்தப்படும்; கலவை சாதம் வழங்கப்படும்' என, தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள் ஒரு வாரம் தாங்கும் அரசு மருத்துவமனைகளில் ஒரு வாரம் காஸ் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படும்போது, மாற்று ஏற்பாடாக எலக்ட்ரிக் ஸ்டவ், கட்டை அடுப்புகள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில், பால், பழம், ரொட்டி போன்ற உணவு பொருட்கள் எப்போதும் தயாராக வைத்தி ருக்க அறிவுறுத்தி உள்ளோம். - சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
'அமுதசுரபி' ஹோட்டல் உரிமையாளர் துளசிராமன்: கொரோனா தொற்றுக்கு பின், உணவு முறையில் விழிப்புணர்வு வந்தது போல், தற்போது சமையல் காஸ் தட்டுப்பாடால் மாற்று ஏற்பாடு குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.
மின்சாரத்திற்கேற்ப, அடுப்புகளை முற்றிலும் மாற்ற முடியாது. விறகு அடுப்புக்கு பெரிய இடவசதி வேண்டும். காஸ் கிடைக்கவில்லை என்றால் ஹோட்டலை மூடித்தான் ஆக வேண்டும். ஆனாலும், பணியாளர்களுக்கு சம்பளம் தந்தாக வேண்டும். எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. 'பயோ காஸ்' போன்ற மாற்று ஏற்பாடு குறித்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

