/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணியாளர் மீது தாக்குதல் நடிகை பார்வதி மீது வழக்கு
/
பணியாளர் மீது தாக்குதல் நடிகை பார்வதி மீது வழக்கு
ADDED : செப் 22, 2024 06:51 AM

சென்னை : புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ், 27. இவர், 2022ம் ஆண்டு, சென்னை தேனாம்பேட்டை பின்னி சாலையிலுள்ள கே.ஜே.ஆர்., ஸ்டூடியோ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகை பார்வதி நாயருக்கு, சிறு சிறு பணிகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில், பார்வதி நாயரின் வீட்டில் கை கடிகாரம், மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து பார்வதி நாயர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி, சுபாஷ் சந்திர போஸ் கைது செய்யப்பட்டார். பின், சிறையிலிருந்து வெளியே வந்த இவர், மீண்டும் கே.ஜே.ஆர்., என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்ற பார்வதி நாயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேர், சுபாஷ் சந்திர போசை ஆபாசமாக பேசி, தாக்கியுள்ளனர். இதுகுறித்து சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் சுபாஷ் சந்திரபோஸ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடினார். அங்கு வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், நடிகை பார்வதி நாயர் உட்பட, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை போலீசார், பார்வதி நாயர் உட்பட, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.