/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரசக்தி விநாயகர் கோவில் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற வழக்கு
/
வரசக்தி விநாயகர் கோவில் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற வழக்கு
வரசக்தி விநாயகர் கோவில் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற வழக்கு
வரசக்தி விநாயகர் கோவில் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற வழக்கு
ADDED : நவ 05, 2025 02:56 AM
சென்னை: நெசப்பாக்கம், வரசக்தி விநாயகர் கோவில் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்றக்கோரிய மனுவுக்கு, மாநகராட்சி பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், விருகம்பாக்கத்தை சேர்ந்த எம்.கோபால் தாக்கல் செய்த மனு:
நெசப்பாக்கத்தில், 275 ஆண்டுகள் பழமையான வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
கடந்த 2017ல், கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் ராஜகோபுரமும், கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக, கோவிலின் முன்பகுதியை மறைத்து, அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, அந்த சிலைகளை அகற்றுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், இந்த மூன்று சிலைகளையும் அங்கிருந்து அகற்ற, ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காமராஜர் சிலையை காங்கிரஸ் கட்சியினரும், அண்ணா சிலையை தி.மு.க., கட்சியினரும் அகற்றிவிட்டனர்.
ஆனால், எம்.ஜி.ஆர்., சிலையை மட்டும் அகற்றவில்லை. இதையடுத்து, அந்த சிலையை அகற்ற, மாநகராட்சியிடம், கடந்த 2017 முதல் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டது.
அந்த சிலையை அங்கிருந்து அகற்ற, அப்பகுதியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கவுதமன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
எனவே, கோவிலின் வழிப்பாதையை மறைத்து வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற, சென்னை கலெக்டர், மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்க, சென்னை கலெக்டர், மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

