/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவி, இரு மகன்களை கொலை செய்து 'சிசிடிவி' கேமரா வியாபாரி தற்கொலை? ஈஞ்சம்பாக்கத்தில் பயங்கரம்
/
மனைவி, இரு மகன்களை கொலை செய்து 'சிசிடிவி' கேமரா வியாபாரி தற்கொலை? ஈஞ்சம்பாக்கத்தில் பயங்கரம்
மனைவி, இரு மகன்களை கொலை செய்து 'சிசிடிவி' கேமரா வியாபாரி தற்கொலை? ஈஞ்சம்பாக்கத்தில் பயங்கரம்
மனைவி, இரு மகன்களை கொலை செய்து 'சிசிடிவி' கேமரா வியாபாரி தற்கொலை? ஈஞ்சம்பாக்கத்தில் பயங்கரம்
ADDED : அக் 23, 2025 12:41 AM

நீலாங்கரை: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில், 'சிசிடிவி' கேமரா வியாபாரி குடும்பத்தோடு இறந்து கிடந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தற்கொலை செய்தனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா, 45; பி.பி.ஏ., பட்டதாரி. இவர், பாரிமுனையில் 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமரா விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேவதி, 36. இவர்களுக்கு, ரித்வித் ஹர்ஷத், 15, திக்சித் ஹர்ஷத், 11, என இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர்.
இவர்கள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 'சாகாஸ்' என்ற குடியிருப்பில் மூன்று மாதமாக வசித்தனர். இந்த நிலையில், சேலத்தில் வசிக்கும் சிரஞ்சீவியின் மாமா முரளிக்கு, நேற்று அதிகாலை சிரஞ்சீவி 1 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.
இது குறித்து கேட்க, சிரஞ்சீவியின் மொபைல் போனில் முரளி பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் எடுக்கவில்லை. சந்தேகத்தின்படி, சாலிகிராமத்தில் வசிக்கும் உறவினர் சாய்கிருஷ்ணா என்பவரிடம், வீட்டில் சென்று பார்க்க கூறினார்.
அவர், ஈஞ்சம்பாக்கம் வீட்டிற்கு சென்றபோது, கதவு திறந்திருந்தது. சிரஞ்சீவி கழிப்பறையில் கை, கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் பலியாகி கிடந்தார். ரேவதி, ரித்வித் ஹர்ஷத், திக்சித் ஹர்ஷத் ஆகியோர், பாலித்தீன் பையால் முகம் மூடிய நிலையில் இறந்து கிடந்தனர்.
தகவலின்படி, நீலாங்கரை போலீசார், நான்கு உடல்களையும் மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. போலீசார், கொலை மற்றும் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், ஈஞ்சம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடிதத்தில் எழுதியது என்ன?
'தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் எதையும் இதற்கு மேல் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்கிறோம். எங்கள் இறப்பிற்கு யாரும் காரணமில்லை. இதை நான் எல்லாருக்கும் தெரிவித்து கொள்கிறேன்' என எழுதி, சிரஞ்சீவி மற்றும் ரேவதி ஆகியோரின் கையெழுத்து இருந்தது.
திறந்து கிடந்த கதவு
போலீசார் கூறியதாவது:
சம்பவத்தை பார்க்கும்போது, சிரஞ்சீவி, மனைவி மகன்களை பாலித்தீன் பைகளால் முகத்தை மூடி, தலையணையால் அமுக்கி கொலை செய்து, தன் கை, கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளது தெரிகிறது.
அதேவேளையில், கடிதம் சிரஞ்சீவி எழுதினாரா, முரளிக்கு ஒரு லட்சம் ரூபாய் எதற்கு அனுப்பினார்; தனி ஆளாக மனைவி, மகன்களை கொலை செய்தாரா, வேறு யாராவது உடன் இருந்தார்களா, கதவு திறந்து இருந்ததால், வேறு யாராவது உள்ளே புகுந்து கொலை செய்து கடிதம் எழுதி வைத்தார்களா என, பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
கைரேகை நிபுணர்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின், முழு விபரம் தெரியவரும். உறவினர்கள், நண்பர்கள், கடை ஊழியர்கள், கடன் கொடுத்தவர்களிடம் தீவிரமாக விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.