ADDED : செப் 22, 2025 02:17 AM
சென்னை:'தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை:நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடலுார் மாவட்டம் லால்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில், அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழியில் தலா, 5; கடலுார் மாவட்டம் கே.எம்.கோயில், நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, மயிலாடுதுறை தானியங்கி வானிலை நிலையம் ஆகிய இடங்களில், தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் மியான்மரை ஒட்டிய பகுதிகளில், அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளன. இதனால், தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது. இருப்பினும், தமிழகத்தின் வட மற்றும் தென்மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.