ADDED : செப் 02, 2025 01:52 AM
சென்னை;சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம், அந்தமானில் ஏற்பட்ட வானிலை சூழல் காரணமாக, மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் 'ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், நேற்று காலை 7:25 மணிக்கு புறப்பட்டது. இதில் 180 பயணியர் பயணித்தனர்.
விமானம், அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, அங்கு மோசமான வானிலை நிலைவியது. இதனால், விமானம் தரையிறக்குவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து விமானி, சென்னைக்கு விமானத்தை திருப்பினார். காலை 11:40 மணிக்கு, சென்னைக்கு வந்து தரையிறங்கியது.
பயணியர் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் மாலை புறப்படும் என, அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், அந்தமானில் வானிலை சூழல் சரியாகவில்லை.
இதையடுத்து, அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்தது. பயணியர், ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மாற்று விமானத்தில் இன்று மதியம் அந்தமானுக்கு அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.