/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாரானது சென்னை
/
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தயாரானது சென்னை
UPDATED : ஜன 14, 2026 05:25 AM
ADDED : ஜன 14, 2026 05:23 AM

: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு, சென்னை முழுதும் தயாராகி உள்ளது. கிராமிய கலைகள் குறித்தும், கலைஞர்கள் வாழ்வாதாரம் கருதியும், 'சென்னை சங்கமம்' கலை திருவிழா இன்று துவங்குகிறது. எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
தமிழக சுற்றுலா துறை சார்பில், சென்னை தீவுத்திடலில் 50வது சுற்றுலா பொருட்காட்சி துவங்கியுள்ளது. இங்கு, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள், உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில், சுற்றுலா பயணியருக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் வந்து செல்வதில் சிரமம் இருக்காது.
பொங்கல் பண்டிகைக்கு படைக்க, கோயம்பேடு சிறப்பு சந்தை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, 15 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதேபோல், 10 செடிகள் அடங்கிய மஞ்சள் கொத்து 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு செடி மஞ்சள் கொத்து 20 - 50 ரூபாய் வரையும், இஞ்சி கொத்து ஒன்று 30 - 50 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சந்தைக்கு 4,000 டன் காய்கறிகள் வந்துள்ளன.
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் கிலோ மல்லிகை பூ, 4,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று 5,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஜாதி மல்லி 1,000; முல்லை 2,000 ரூபாய்க்கு விற்றது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
எந்தெந்த இடங்களில் கலை விழா நடக்குது
மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, அரசு இசைக் கல்லுாரி, கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா.
அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம், கொளத்துாரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்கள், லேமேக் பள்ளி மைதானம், ஆவடி ஆயுதப்படை தொழிற்சாலை வளாகம், பல்லாவரம் கன்டோன்மெண்ட் பூங்கா மற்றும் தாம்பரம் வள்ளுவர் குருகுலம்.
வண்டலுார் பூங்கா பார்வை நேரம் நீட்டிப்பு
★ ஜன., 16, 17 ஆகிய நாட்களில், பார்வை நேரம் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல, 10 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்
★ மின்னணு நுழைவுச்சீட்டு வழங்கும் முறைக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள், 'வாட்ஸாப், tickets.aazp.in என்ற இணையதளம், வண்டலுார் பூங்கா மொபைல் செயலி வாயிலாக நுழைவு சீட்டு பெற, இலவச வை - பை வசதி வழங்கப்படும். நேரடியாக டிக்கெட் பெற ஒரு கவுன்டர் மட்டும் செயல்படும்.
★ பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவர அனுமதி இல்லை.
★ சிங்கம் மற்றும் மான்கள் சபாரி சேவைகள் வழக்கம்போல் உண்டு. கூட்ட நெரிசலை பொறுத்து, பயண நேரங்களில் மாற்றம் ஏற்படலாம் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 20 இடங்களில், வரும் 15 முதல் 18ம் தேதி வரை, மூன்று நாட்கள், 'சென்னை சங்கமம் - 2026' கலை விழாக்கள் நடக்கின்றன. கிராமியம், செவ்வியல் மற்றும் இசை நிகழ்வுகள் நடத்த 1,500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். தவிர, உணவு திருவிழாவும் நடத்தப்படுகிறது. 'கோ - ஆப்டெக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, பாரம்பரிய நெசவு தொழிலாளர்கள் பங்கேற்கும், 'பேஷன் ஷோ' நடத்தப்படுகிறது. கனிமொழி தி.மு.க., - எம்.பி., மற்றும் சென்னை சங்கமம் திருவிழா ஒருங்கிணைப்பாளர்
- நமது நிருபர் குழு -

