/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே மாதத்தில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை... கந்தல்! ரூ.30 கோடியை வீணடித்த ஆணைய அதிகாரிகள்
/
ஒரே மாதத்தில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை... கந்தல்! ரூ.30 கோடியை வீணடித்த ஆணைய அதிகாரிகள்
ஒரே மாதத்தில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை... கந்தல்! ரூ.30 கோடியை வீணடித்த ஆணைய அதிகாரிகள்
ஒரே மாதத்தில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை... கந்தல்! ரூ.30 கோடியை வீணடித்த ஆணைய அதிகாரிகள்
ADDED : நவ 20, 2024 11:53 PM

சென்னை :தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், ஒரு மாதத்திற்கு முன், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலையில் பல இடங்களில் பள்ளம் விழுந்து, கந்தலானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தெரியாமல் இருக்க, ஒட்டுபோட்டு சமாளிக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் ரவுண்டானா - நல்லுார் இடையிலான 11 கி.மீ., சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளும், மற்றொரு பகுதி திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள்ளும் வருகிறது.
தற்போது, நான்கு வழிச்சாலையாக உள்ள இதை, ஆறுவழியாக விரிவாக்கம் செய்யும் திட்டம், 2009ம் ஆண்டு துவங்கப்பட்டு, பின் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்கும் திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.
இந்த சாலையை, அடுத்தாண்டு ஜன., மாதம், தமிழக நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த சாலையில், விபத்துகள் அதிகரித்து வந்த நிலையில், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளுடன் சாலையை சீரமைப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கால்வாய் அமைப்பதற்கு வசதியாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. சாலையில் தேங்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு, மிகவும் குறுகிய மழைநீர் கால்வாய் ஒப்புக்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால், மழைக்காலத்தில் சாலையில் தேங்கும் நீர் வெளியேறுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணிகள், அக்டோபர் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன. முறையான அளவில் தார் பயன்படுத்தி சாலை அமைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், சமீபத்திய வடகிழக்கு பருவமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், புழல், காவாங்கரை, வடகரை, பாலவாயில் சந்திப்புகளில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் விழுந்துள்ளன.
இதனால், வேகமாக செல்லும் வாகனங்கள் தட்டுத் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது. இதனால், சாலையின் தரம் குறித்து, பலரும் கேள்வி எழுப்பத் துவங்கிஉள்ளனர்.
இதையறிந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், பிரச்னையை மூடி மறைப்பதற்காக, பள்ளம் விழுந்த இடங்களில் தார் மற்றும் சிமென்ட் கலவை கொட்டி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:
மாதவரம் ரவுண்டானா - நல்லுார் இடையிலான சாலை கிட்டத்தட்ட, 10 ஆண்டுகளுக்குப் பின் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்த காரணத்தாலோ என்னவோ, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
உரிய தரத்தில் தார் கலவை பயன்படுத்தி இருந்தால், சாலை ஒரு மாதத்தில் சேதமடைந்து இருக்காது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய சென்னை மண்டல அதிகாரி வீரேந்திர சாம்பியால், ஆய்வு செய்ய வேண்டும்.
தரமில்லாத சாலை அமைத்திருந்தால், ஒப்பந்ததாரர் மீதும், அதற்கு காரணமான திட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

