மெரினாவுக்கு 'நீலக்கொடி' சான்று கிடைப்பதில் சிக்கல்! கழிவுநீர் கலப்பை தடுக்காதது ஆய்வில் அம்பலம்
மெரினாவுக்கு 'நீலக்கொடி' சான்று கிடைப்பதில் சிக்கல்! கழிவுநீர் கலப்பை தடுக்காதது ஆய்வில் அம்பலம்
UPDATED : ஆக 18, 2026 09:40 PM
ADDED : ஆக 18, 2026 09:32 PM

சென்னை:மெரினா கடற்கரையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டாலும், 'நீலக்கொடி கடற்கரை சான்றிதல்' கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணிகளை ஆய்வு செய்த சர்வதேச அமைப்பு, கூவம் ஆற்றில் ஓடும் கழிவுநீர் நேரடியாக, நேப்பியார் பாலம் அருகே கடலில் கலப்பதை சுட்டிக்காட்டி, நீலக்கொடி கடற்கரைக்கான சான்றிதழ் தர மறுத்துவிட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, துாய்மை, நன்னீர் வசதி, பாதுகாப்பு போன்ற, 33 சர்வதேச தகுதிகளின்படி, ஐரோப்பிய நாடான டென்மார்க்கை சேர்ந்த, சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வ அமைப்பு, நீலக்கொடி கடற்கரை சான்றிதழை வழங்கி வருகிறது.
சென்னையில் கோவளம் மற்றும் மெரினா கடற்கரையில், மாநகராட்சி நீச்சல் குளம் அருகே, நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
தி.மு.க., ஆட்சியில், சென்னை மெரினா கடற்கரையில், மெரினா நீச்சல் குளம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மூங்கில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நீலக்கொடி கடற்கறை, 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, விவேகானத்தர் இல்லம் எதிரே, 20 ஏக்கர் பரப்பளவில், ஏழு கோடி ரூபாயிலும்; காந்தி சிலை முதல் லுாப் சாலை வரை, 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பல்வேறு கட்டங்களாக நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து, மெரினா கடற்கரை முழுதும், நீலக்கொடி கடற்கரைக்கான பணிகளை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மெரினா நீலக்கொடி கடற்கரை பணிகளை ஆய்வு செய்த சர்வதேச அமைப்பு, கூவம் ஆற்றில் ஓடும் கழிவுநீர், நேரடியாக நேப்பியார் பாலம் அருகே கடலில் கலப்பதை பார்த்து, நீலக்கொடி கடற்கரைக்கான சான்றிதழ் தர மறுத்துவிட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது:
மெரினாவில் நீலக்கொடி கடற்கரைக்கான சான்றிதழ் தர முடியாது என, சர்வதேச அமைப்பு முழுமையாக மறுக்கவில்லை.
குளிக்க தகுந்த இடமில்லை என்ற அடிப்படையில்கூட சான்றிதழ் வழங்கப்படும் அல்லது நீலக்கொடி கடற்கரைக்கான முதற்கட்ட பணிகள் என்ற அடிப்படையிலும் சான்றிதழ் வழங்கலாம்.
ஆனால், முழுமையாக சான்றிதழ் பெற வேண்டுமென்றால், கூவம் ஆற்றில் குளிக்கும் வகையிலான நன்னீர் செல்ல வேண்டும். கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் தொடங்கி, செயல்பாட்டுக்கு வர ஆண்டுகள் ஆகும்.
அதேநேரம், நீலக்கொடி சான்றிதழ் பெற முடியாவிட்டாலும், கடற்கரையில் செய்த பணிகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணியரிடம் வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
***
