/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி கமாண்டென்ட் நேரில் ஆஜராக உத்தரவு
/
ஆவடி கமாண்டென்ட் நேரில் ஆஜராக உத்தரவு
ADDED : பிப் 04, 2024 02:24 AM
சென்னை:தவறாக சம்பளம் நிர்ணயம் செய்து, கான்ஸ்டபிள் சம்பளத்தில் பிடித்தம் செய்த வழக்கில், ஆவடி போலீஸ் பட்டாலியன் கமாண்டென்ட் நேரில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடியில் உள்ள சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜா, தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
எனக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், கூடுதலாக தரப்பட்ட 56,363 ரூபாயை படிப்படியாக பிடித்தம் செய்வதாகவும், 13வது பட்டாலியன் கமாண்டென்ட் உத்தரவிட்டார்
அதன்படி, சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. சம்பளப் பிடித்தம் செய்ய, கமாண்டென்ட் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனு, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன், விசாரணைக்கு வந்தது
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். தவறாக எப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; உத்தரவு பிறப்பித்த சம்பந்தப்பட்ட அதிகாரி, தற்போது பணியில் உள்ளாரா என்பதை சரிபார்க்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார்
பணியில் இருந்தால், அவர் ஆஜராக வேண்டும் என்றும் இடமாற்றம் அல்லது ஓய்வு பெற்றிருந்தால், 13வது பட்டாலியன் கமாண்டென்ட் வரும் 6ம் தேதி ஆஜராகவும், நீதிபதி உத்தரவிட்டார்.