/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ளம் வடியாததால் செம்மஞ்சேரியில் புலம்பல்
/
வெள்ளம் வடியாததால் செம்மஞ்சேரியில் புலம்பல்
UPDATED : நவ 05, 2024 03:54 AM
ADDED : நவ 05, 2024 12:44 AM

சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், செல்வாநகர் விரிவு 2வது தெரு, 16 அடி அகலம் உடையது. இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சாலை புதுப்பித்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
லேசான மழைக்கே, சாலையிலும், வீடுகளிலும் வெள்ளம் தேங்குகிறது. சாலையில் நாட்கணக்கில் மழைநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைநீரை வடிய செய்ய, கவுன்சிலர், அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டோம். நாங்களே குழாய் வாங்கி தருகிறோம். சாலையில் பதித்து, வெள்ளத்தை வடிய செய்து தாருங்கள் என, கேட்டும் உரிய பதில் இல்லை. மழை வந்தாலே, நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்.
- சுமதி, ஈஞ்சம்பாக்கம்.
சோமங்கலத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுமா?
குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில், பேருந்து நிலையம், காவல் நிலையம், பழமை வாய்ந்த சுந்தரராஜ பெருமாள் கோவில், வணிக கடைகள், குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, காவல் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால், பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சோமங்கலத்தில் ஒரு ஏ.டி.எம்., மையமே உள்ள நிலையில், அதுவும் இரு மாதங்களாக இயங்காததால், சிரமமாக இருக்கிறது.
-- ராகேஷ், சோமங்கலம்.
-முடிச்சூர் சாலையில்
மாடுகளால் அவதி
-முடிச்சூர் - மணிமங்கலம் சாலை, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதுாரை இணைக்கிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து உடைய இச்சாலையில், சமீபகாலமாக மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளன. டி.எம்.ஜி., கல்லுாரி அருகே இரண்டு, மூன்று இடங்களில் கூட்டம் கூட்டமாக திரியும் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதியும், தடுமாறி விழும் நிலை உள்ளது.
முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில், மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும்.
- மதன்குமார், முடிச்சூர்.

