ADDED : மார் 16, 2026 05:36 AM

அரும்பாக்கம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, கூவம் தரைப்பாலம் பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், 106 - 107வது வார்டுகள் அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெரு வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் இக்கால்வாயில் பழைய தரைப்பாலத்தை இடித்து, 5 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டும் பணியை, மாநகராட்சி ஓராண்டுக்கு முன் துவங்கியது.
பணிகள் துவங்கி பல மாதங்களாகியும், எந்த முன்னேற்றமும் இல்லாததால், போக்குவரத்து வழியின்றி மக்கள் அவதியடைந்தனர். பாதை அடைபட்டதால், பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தரைப்பாலம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து, நேற்று மதியம், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், சுற்றுவட்டார மக்கள் நிம்மதியடைந்தனர்.
