/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறப்பு, இறப்பு சான்று பதிவதில் மாநகராட்சி மீண்டும் முறைகேடு
/
பிறப்பு, இறப்பு சான்று பதிவதில் மாநகராட்சி மீண்டும் முறைகேடு
பிறப்பு, இறப்பு சான்று பதிவதில் மாநகராட்சி மீண்டும் முறைகேடு
பிறப்பு, இறப்பு சான்று பதிவதில் மாநகராட்சி மீண்டும் முறைகேடு
ADDED : நவ 23, 2024 12:46 AM
சென்னை மாநகராட்சி எல்லையில் நடக்கும் பிறப்பு, இறப்பு சம்பவங்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உறுதி செய்து, அதற்கான சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
மாநகராட்சியை பொறுத்தவரை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில், பதிவு செய்த 15 நாட்கள், அதிகபட்சம் ஒரு மாதத்தில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய, மண்டல அளவில் ஒப்பந்த 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், சான்றிதழில் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
சான்றிதழில் வழங்கப்படும், 'இ - சைன்' எனும் மின்னணு கையொப்பதுடன் உறுதி செய்யும் அதிகாரம், சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவரது ஆய்வுக்குப் பின், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில், ஒரு சுகாதார ஆய்வாளரின் கடவு சொல்லை, மற்றொரு ஆய்வாளர் சமீபத்தில் பயன்படுத்தி, ஒரு பயனாளரின் தந்தை பெயரை மாற்றி மோசடியில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சுகாதார ஆய்வாளர்களின் ஐ.டி., மற்றும் கடவுச்சொல்லை, அந்தந்த மண்டலங்களில் பணியாற்றும், 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களும்' பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பொறுத்தவரை, இருவேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
குறிப்பாக, சென்னையில் சொத்து வைத்திருக்கும் நபர், வெளி மாநிலங்கள் அல்லது நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும்பட்சத்தில், அவர் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் வழங்கும் முறைகேடுகள், இதற்குமுன் நடந்து உள்ளன.
அதேபோல், வெளி மாவட்டங்களில் பிறந்தவர்கள், ஏதேனும் ஒரு காரணங்களுக்காக பிறப்பு சான்றிதழ் தேவை எனும்பட்சத்தில், சென்னையில் பிறந்ததாக மாநகராட்சி தளத்தில் பதிவிட்டு, முறைகேடாக சான்றிதழ் பெறுகின்றனர்.
அதுபோன்ற முறையில்தான், ஒரு சுகாதார ஆய்வாளர் சிக்கி, சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் அதிகரிக்காமல் தடுக்க, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் சுகாதார ஆய்வாளர்களின் தற்போது உள்ள கடவுச்சொல்லை மாற்றி, புதிய கடவுச்சொல் வழங்க வேண்டும்.
அவற்றை சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே பயன்படுத்துவதை, மாநகராட்சி உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

