/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய குடியிருப்புகளில் துாய்மை பணிகள் பெரு நிறுவனங்களிடம் தருது மாநகராட்சி
/
வாரிய குடியிருப்புகளில் துாய்மை பணிகள் பெரு நிறுவனங்களிடம் தருது மாநகராட்சி
வாரிய குடியிருப்புகளில் துாய்மை பணிகள் பெரு நிறுவனங்களிடம் தருது மாநகராட்சி
வாரிய குடியிருப்புகளில் துாய்மை பணிகள் பெரு நிறுவனங்களிடம் தருது மாநகராட்சி
ADDED : ஜன 23, 2026 05:19 AM

சென்னை: நகர்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்புகளின் துாய்மை பணிகளை, பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 684 ஏக்கர் பரப்பில், 77,405 வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் துாய்மை பணியை வாரியம் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், குடியிருப்புகளில் துாய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் என, மாநகராட்சி அறிவித்தது.
இதையடுத்து, ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கடந்தாண்டு மே, ஜூன் மாதங்களில் பணி ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், தனியார் நிறுவனம் முறையாக துாய்மை பணியை மேற்கொள்ளவில்லை என, மண்டலங்கள் மற்றும் மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால், துாய்மை பணியை பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார் ஆகிய நான்கு மண்ட லங்களில் உள்ள வாரிய குடியிருப்புகளில் துாய்மை பணி, சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள வாரிய குடியிருப்புகளின் துாய்மை பணி, சுமித் உர்பேசர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டு நிறுவனங்களும் மார்ச் 1 முதல், வாரிய குடியிருப்புகளில் உள்ள 77,405 வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை துவங்கும்.
அங்குள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளை துாய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, மாதம் 3 கோடி ரூபாய் வரை செலவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

