ADDED : செப் 04, 2026 03:54 AM

நீதிமன்றத்தில் மூவர் சரண்
முத்தியால்பேட்டை: பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரிப், 47; கார் ஓட்டுநர்.கடந்த மாதம் 6ம் தேதி முன்விரோதம் காரணமாக, முகமது ஷெரிபை வெட்டிக் கொல்ல முயன்ற, மண்ணடியைச் சேர்ந்த சாதிக் அலி, 45, பைசல் ரகுமான், சத்யநாராயணன், 19, உட்பட ஐந்து பேர் முத்தியால்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த ஆலந்துாரைச் சேர்ந்த ஆனந்த நாராயணன், 21, பாரத், 25, மதுரையைச் சேர்ந்த சிவக்குமார், 31, ஆகியோர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
15 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், செம்மொழி சாலை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஹாருக் உசேன், 27, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, செம்மஞ்சேரி போலீசார் நேற்று அதிகாலை பிடித்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
வக்கீல் கணவரை தாக்கிய பெண் கைது
புரசைவாக்கம்: புரசைவாக்கம், எஸ்.எஸ்.,புரம் பகுதியைச் சேர்ந்த குணசீலன், 50, அப்பகுதியில் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ரேகா, 26, மதுபாட்டில்கள், கஞ்சா விற்பதாக தன்னை பற்றி போலீசில் காட்டி கொடுத்ததாகக்கூறி, தகாத வார்த்தை களால் பேசி குணசீலனை தாக்கினார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குணசீலன் மனைவியும், வழக்கறிஞருமான அலமேலு மங்கை புகாரையடுத்து, தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், ஸ்ரீ ரேகாவை கைது செய்தனர்.
சிறுமியிடம் அத்துமீறிய குமரி வாலிபர் கைது
ஆலந்துார்: பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட, 16 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். போலீசாரின் விசாரணையில், அந்த சிறுமி சமூக வலைதளம் மூலம் பழக்கமான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திவேஷ், 19, எனும் வாலிபரை காதலித்தது தெரியவந்தது. அவர் அழைத்து சென்றதும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தோவாளை சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், திவேஷை நேற்று கைது செய்தனர்.
பெண்ணை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
வளசரவாக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண். வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் பணிபுரிந்தார். மருந்து கடையின் பொறுப்பாளராக வளசரவாக்கம், அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 37 என்பவர், தன்னை திருமணம் செய்யுமாறு அப்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். அவர் மறுக்கவே, அப்பெண்ணுடன் தான் இருப்பது போல் புகைப்படங்களை 'மார்பிங்' செய்து மிரட்டி வந்துள்ளார். இதனால், அந்த பெண் வேலையை விட்டு நின்று விட்டார். மீண்டும் ரஞ்சித்குமாரின் தொந்தரவு அதிகரிக்கவே, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், நேற்று முன்தினம் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரூ.1 லட்சம் மோசடி பெண்ணுக்கு வலை
வியாசர்பாடி: ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி ராஜலட்சுமி, வீட்டு வேலை செய்து வருகிறார். இவரிடம் அறிமுகமான மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த சாகுல் முஹானா என்ற பெண், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒரு லட்சம் ரூபாய் வாங்கினார். வேலையையும் தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சாகுல் முகானாவை தேடி வருகின்றனர்.
