/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர் --- ஹோட்டலில் திருடிய இருவருக்கு, 'காப்பு'
/
கிரைம் கார்னர் --- ஹோட்டலில் திருடிய இருவருக்கு, 'காப்பு'
கிரைம் கார்னர் --- ஹோட்டலில் திருடிய இருவருக்கு, 'காப்பு'
கிரைம் கார்னர் --- ஹோட்டலில் திருடிய இருவருக்கு, 'காப்பு'
ADDED : பிப் 10, 2026 05:59 AM

அபிராமபுரம்: ஆழ்வார்பேட்டை, ஜெனியர்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலின் பூட்டு உடைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்த பாத்திரங்கள், விளக்குகள் உள்ளிட்டவை திருடப்பட்டன.
அபிராமபுரம் போலீசார் விசாரித்து, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை, 50, பிரேம்குமார், 32, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
பெண்ணிடம் போன் திருடியவர் கைது
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், அஜிஸ்நகர் பிரதான சாலையைச் சேர்ந்த ஸ்ரீபிரியா, 26, நேற்று முன்தினம், ரயில்வே பார்டர் சாலையில், கோழி இறைச்சி வாங்க கணவருடன் சென்றார்.
கடை அருகில் நின்றிருந்த ஸ்ரீபிரியாவின் மொபைல் போனை, அங்கிருந்த நபர் ஒருவர் பறித்து தப்பினார். போலீசார் விசாரித்து, போன் பறித்த வேலுார், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 29, என்பவரை நேற்று கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.
வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், நேற்று முன்தினம் அதிகாலை, ஆட்டோவில் காஸ் நிரப்பிவிட்டு, ஓட்டுநர் கைலாஷ் வெளியே வந்தார்.
அப்போது இருவர், சவாரி கேட்பதுபோல் நடித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். வேப்பேரி போலீசார், யானைகவுனியைச் சேர்ந்த தினேஷ்குமார், 27, அஜய், 23, இருவரையும் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
மாணவியரிடம் சில்மிஷம் செய்தவர் கைது
கிண்டி: சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் இரவு, கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள கடையில், தோழியுடன் ஜூஸ் குடித்து கொண்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கூடத்திற்கு வந்த இருவர், அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சட்டையை பிடித்த பெண்கள், சரமாரியாக தாக்கி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற ஒரு பெண் போலீசிடமும், போதை நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் உதவியுடன் இரண்டு பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். ஒருவர் தப்பி ஓடினார். பிடிபட்ட நபர், தஞ்சாவூரை சேர்ந்த தளபதி, 34, என தெரிந்தது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தப்பி ஓடிய நபரை போலீசார் தேடுகின்றனர்.

