மாணவியிடம் அத்துமீறிய கொத்தனார் கைது
கோட்டூர்புரம்: மேற்கு வங்கம், கொல்கட்டாவைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், தரமணியில் உள்ள கல்லுாரியில் பயில்கிறார்.
கடந்த 1ம் தேதி இரவு, இரு தோழிகளுடன் கோட்டூர்புரம், டபிள்யூ.பி.டி., சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு, அங்கே நின்றிருந்தார். அப்போது, 60 வயது முதியவர், 21 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார்.
கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காசி, 61, என்பவரை நேற்று கைது செய்தனர். கொத்தனார் வேலை செய்து வருவது, விசாரணையில் தெரியவந்தது.
மின் வடங்கள் திருடிய வாலிபருக்கு 'காப்பு'
அபிராமபுரம்: அபிராமபுரத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம், மயிலாப்பூர் அப்பு தெருவில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறது.
இங்கு வைக்கப்பட்டிருந்த 8 கிலோ மின் வடங்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். நிறுவன துணை மேலாளர் பேரரசன், 25, புகாரையடுத்து, விசாரித்த அபிராமபுரம் போலீசார், மின்வடங்களை திருடிய ராயப்பேட்டையை சேர்ந்த ஜேம்ஸ், 22, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ மின்வடங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அச்சக உரிமையாளரை தாக்கிய ரவுடிக்கு வலை
வடபழனி: வடபழனி - சைதாப்பேட்டை சாலையைச் சேர்ந்தவர் சம்பத், 52. இவர், சைதாப்பேட்டையில் அச்சகம் நடத்தி வருகிறார்.
கே.கே., நகர், ராணி அண்ணா நகர் குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி கனகராஜ், 51, நேற்று முன்தினம் இரவு, சம்பத் வீட்டிற்கு சென்றுள்ளார். மது போதையில் இருந்த கனகராஜ், அவரது நண்பர் முகமது சாலிக் ஆகியோர், அச்சகம் நடத்த மாமூல் கேட்டு, கீழே கிடந்த கல்லால் சம்பத்தை தாக்கி விட்டு தப்பினர். வடபழனி போலீசார் தலைமறைவான கனகராஜ், முகமது சாலிக் ஆகியோரை தேடி வருகின்றனர்.
10 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில், பூந்தமல்லி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நீலாங்கரையைச் சேர்ந்த ஆகாஷ், 24, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாய் டெப் தாஸ், 19, ஆகிய இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

