PUBLISHED ON : அக் 05, 2025 12:00 AM

லாரி மோதி
ஒருவர் பலி
புழல்: மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மெவசிங் பூனியா, 53; கொளத்துார் பாலாஜி நகரில், லாரி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் நடத்தி வந்தார்.
மாதவரம் நெடுஞ்சாலை, புழல் அருகே உள்ள வடபெரும்பாக்கம் மழைநீர் கால்வாய் அருகே, இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலே இறந்தார். செங்குன்றம் போலீசார் லாரி ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த சுப்ரமணியை, 53, கைது செய்தனர்.
'மாஜி' வீரரிடம் நகை பறிப்பு
கோயம்பேடு: கோயம்பேடைச் சேர்ந்தவர் ஜெயராமன், 50; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர், நேற்று முன்தினம் கோயம்பேடில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்றார். அப்போது, சக பயணி ஒருவர், அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார். பின், ஜெயராமன் அணிந்திருந்த 12 சவரன் நகைகளை பறித்து மாயமானார். இதுகுறித்து அவர், கோயம்பேடு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு
தம்பதி கைது
கீழ்கட்டளை: கடந்த 2014ம் ஆண்டு, வீடு விற்பது சம்பந்தமான வழக்கில் கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த செல்வகுமரன், 63, அவர் மனைவி வரலட்சுமி, 47, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜாமினில் வந்து தலைமறைவாகினர். 2024, பிப்., 23ல் தம்பதி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் செல்வமுத்துகுமரன், வரலட்சுமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
சொகுசு கார்
தீ பற்றி எரிந்து நாசம்
அரும்பாக்கம்: அம்பத்துாரைச் சேர்ந்தவர் தேஜஸ், 20; கல்லுாரி மாணவர். நேற்று காலை, கல்லுாரிக்கு பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் நண்பர்களுடன் சென்றார்.
அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்தி, அவர்கள் இறங்கிய சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி எரிந்தது.