ADDED : ஜன 23, 2026 05:32 AM

பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு
எண்ணுார்: சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தேவகி, 76. இவர், நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார். எண்ணுார் விரைவு சாலையை கடக்கும்போது, அவ்வழியே சென்ற மாநகர பேருந்து பக்கவாட்டில் உரசி சென்றுள்ளது. இதில், நிலை தடுமாறி விழுந்த தேவகிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்கலேட்டரில் மயங்கி விழுந்தவர் பலி
ஆலந்துார்: சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன், 53. இவர், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., அலுவலகத்தில் பணிபுரிந்தார். நேற்று ஆலந்துார் மெட்ரோ ரயில் எஸ்கலேட்டர் எனும் நகரும் படிக்கட்டில் பயணித்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

