ADDED : டிச 20, 2025 05:57 AM
தெலுங்கானா நபர் காரில் கடத்தல் கோயம்பேடு: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா, 57. சில வாரங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை வந்த இவர், ஆழ்வார்திருநகர், அன்பு நகரில் குடியிருக்கிறார். நேற்று மதியம் வீட்டின் வெளியில் நின்றிருந்த ரவீந்திர கவுடாவை, ஒரு கும்பல் காரில் கடத்தியது. கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தெலுங்கானாவில் பழைய கார்களை விற்கும் தொழில் செய்தபோது, 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதால், ரவீந்திர கவுடா சென்னைக்கு வந்தது தெரிந்தது. அவரை கடத்தியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
'இன்ஸ்டா'வில் போதை பொருள் 'சப்ளை' புளியந்தோப்பு: 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி போதை பொருள் விற்ற, அயனாவரம், பாளையக்கார தெருவைச் சேர்ந்த சாய் தீபக், 25, என்பவரை, திரு.வி.க.நகர் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 30,000 ரூபாய்.
வழிப்பறி திருடனுக்கு 'காப்பு' கோயம்பேடு: கோயம்பேடு, சின்மயா நகரைச் சேர்ந்தவர் பாபு, 34; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் நடந்து சென்றபோது, அம்பத்துாரைச் சேர்ந்த மஞ்சுநாதன், 23, என்பவர், கத்திமுனையில் 500 ரூபாய் பறித்து தப்பினார். விசாரித்த கோயம்பேடு போலீசார் மஞ்சுநாதனை நேற்று கைது செய்தனர்.
8 சவரன் நகை ரூ.28,000 மாயம் பெரம்பூர்: புழல் பகுதியைச் சேர்ந்தவர் குர்ரம்மா, 30. இவரது கணவர் கோட்டீஸ்வரன், சபரிமலைக்கு செல்வதற்காக, நேற்று பெரம்பூர் அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டினார். அப்போது பெரம்பூர் வந்த குர்ரம்மா, கணவனை கோவிலுக்கு வழியனுப்பி விட்டு, ஆட்டோவில் ஏறினார். அப்போது, 8 சவரன் நகை, 28,000 ரூபாய் மறந்து வைத்துள்ளார். இது குறித்து செம்பியம் போலீசில் குர்ரம்மா புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ ஓட்டுநரான பர்மனை தொடர்பு கொண்டு கைப்பை குறித்து விசாரித்தனர். அதில் 14,000 ரூபாய் மட்டுமே இருப்பதாக தெரிவித்த பர்மன், அதை போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
குக்கர் திருடர்களுக்கு 'கம்பி' புளியந்தோப்பு: புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையைச் சேர்ந்தவர் ரஜினிதாஸ், 45; ஐ.டி., ஊழியர். கடந்த 15ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து 10,000 ரூபாய், குக்கர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். விசாரித்த போலீசார், புளியந்தோப்பு முத்துநகரைச் சேர்ந்த தனுஷ், 21, ஜான் ராஜேஷ், 19, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

