ADDED : ஜன 11, 2026 05:31 AM

125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கண்ணகி நகர்: ஓ.எம்.ஆர்., ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் கடையில் சோதனை செய்தபோது, அங்கு, 125 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் அலெக்சாண்டர், 50, மற்றும் வினியோகம் செய்த சேசுராஜ், 45, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
கத்திமுனையில் வழிப்பறி: வாலிபர் கைது
பழவந்தாங்கல்: நங்கநல்லுார், பி.வி., நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 28; கூலித் தொழிலாளி. நேற்றுமுன்தினம், பி.வி., நகர், 3வது பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அஜித்குமார் தர மறுத்ததால், கத்தி முனையில் பாக்கெட்டில் இருந்த, 600 ரூபாயை பறித்து தப்பினார்.
பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்த நங்கநல்லுாரை சேர்ந்த கோகுல், 20; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
சென்னை: கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு, அண்ணா சாலையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றார். சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது, பின் சீட்டில் இருந்த நபர், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், மது போதையில் இருந்த அந்த நபரை, சரமாரியாக வெளுத்து வாங்கினார். தியேட்டர் பாதுகாவலர்கள், அந்த போதை நபரை பிடித்து, திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், அண்ணா சாலையைச் சேர்ந்த ராஜேஷ், 27, என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
நண்பரை கத்தியால் வெட்டியவர் கைது
சென்னை: தி.நகர், தெற்கு போக் சாலையைச் சேர்ந்தவர் ராஜு, 53; பெயின்டர். நேற்று முன்தினம், அவரும், அவரது நண்பர் முருகன், 61, என்பவரும், பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சென்று, இரவு ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில், ஆத்திரமடைந்த முருகன், கத்தியால் ராஜுவை வெட்டியுள்ளார். இதில், கையில் ரத்தக் காயமடைந்த ராஜு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின், அவரது மகன் வினோத்குமார் கொடுத்த புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் நேற்று தி.நகரைச் சேர்ந்த முருகனை கைது செய்தனர்.
மொபைல் போன் திருடியவர் கைது
பயணியிடம் திருடியவருக்கு 'காப்பு'
சென்னை: கோடம்பாக்கம் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் மனோகரன், 41, நேற்று முன்தினம் இரவு, மின்சார ரயிலில் தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
கிண்டி ரயில் நிலையம் அருகே, அவரது பை திருடுபோனது. அதில் மடிக்கணினி, 'ட்ரோன்' கேமரா, மொபைல்போன் ஆகியவை இருந்தன.
மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 52, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மனோகரன் உடைமைகளை பறிமுதல் செய்தனர்.
வாரிய அலுவலகத்தில் திருடிய வாலிபர் கைது
வளசரவாக்கம்: வளசரவாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் இருந்து இன்வெர்ட்டர் பேட்டரி, மூன்று வாட்டர் மீட்டர்களை, டிச., 26ம் தேதி மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரையடுத்து, வளசரவாக்கம் போலீசார் விசாரித்து, இத்திருட்டில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சன், 19, என்பவரை நேற்று கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, அரசு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

