ADDED : ஜன 17, 2026 05:07 AM
பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறியவர் கைது
செம்பியம் : பிராட்வேயில் இருந்து செங்குன்றம் செல்லும் தடம் எண் 242 பேருந்தில், நேற்று முன்தினம் மாலை, 30 வயது பெண் வழக்கறிஞர் பயணித்தார். பேருந்தில் மது போதையில் இருந்த வாலிபர், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அப்பெண், வாலிபரை சரமாரி தாக்கியதுடன் செம்பியம் போலீசிடம் ஒப்படைத்தார். பெரம்பூரைச் சேர்ந்த நிஜாம், 36, என்ற அந்நபரை கைது செய்தனர்.
வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
சோமங்கலம்: குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வேந்தன், 40; நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள், 75,000 ரூபாய் திருடு போயின.
வேன் மீது மோதிய பஸ் உயிர் தப்பிய ஊழியர்கள்
ஒரகடம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து, 30 ஊழியர்களுடன், நேற்று முன்தினம் மாலை, தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பகுதியை கடந்த போது, சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மற்றும் அங்கிருந்த மின் கம்பம் மீது மோதி, பேருந்து விபத்துக்குள்ளானது. லோடு வேன் சேதமடைந்தது. மின் கம்பம் உடைந்து விழுந்தது. மின் வாரியத்தினர், மின்சாரத்தை உடனே துண்டித்தனர். பேருந்து ஓட்டுநர் வர்கீஸை, படப்பை போலீசார் கைது செய்தனர். யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

