ADDED : ஜன 31, 2026 05:29 AM
ரூ.60 லட்சம் நிலமோசடி: இருவர் கைது
ஆவடி: கொளத்துாரைச் சேர்ந்தவர் ராஜாராமன், 65. இவருக்கு, கொரட்டூர், பாரத் நகர் பகுதியில், 1,891 சதுர அடி இடம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, பக்கிரிசாமி, ரவி ஆகியோர், ராஜாராம் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, அவரது இடத்தை கிருஷ்ணகுமார் மற்றும் சுப்ரஜா ஆகியோருக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். தன் 60 லட்சம் மதிப்புடைய இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் ராஜாராம் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், செங்குன்றத்தைச் சேர்ந்த பிரபு, 42, திருவள்ளூரைச் சேர்ந்த ரவி, 50, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
வேன் மோதி சிறுவன் படுகாயம்
திருவொற்றியூர்: நடைபாதையில் குடும்பத்துடன் தங்கி, தெருக்களில் கயிறு மேல் நடத்தல், கம்பிக்குள் நுழைந்து வெளியேறுதல் போன்ற வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வருபவர் பிக்காராம். இவரது மகன், ரகுபீர், 6, நேற்று காலை திருவொற்றியூர், அண்ணாமலை நகர் - வேலம்மாள் பள்ளி அருகே, கம்பிக்குள் நுழைந்து வெளியே வரும் வித்தை காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த, கே.சி.பி., நிறுவனத்தின் வேன், சிறுவன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரகுபீரின் வலது கால் வேன் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போதை ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்
திரிசூலம்: திரிசூலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகன், 47; ஆட்டோ ஓட்டுநர். நேற்று மதியம், போதையில் இருந்த அவர், ஆட்டோவை தாறுமாறாக ஓட்டினார். ஒரு தெருவிற்குள் சென்ற முருகன், அங்கு நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியதோடு, பொதுமக்கள் மீதும் மோதுவது போல் ஓட்டி சென்று, முட்டுசந்தில் முட்டி நின்றார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார், முருகனுக்கு அபராதம் விதித்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
பெண்ணிடம் ஆபாச சைகை செய்தவர் கைது
கோயம்பேடு: ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அங்கு வாலிபர் ஒருவர், அவரிடம் ஆபாச சைகை காண்பித்து, தகாத வார்த்தை பேசியுள்ளார். விசாரித்த கோயம்பேடு போலீசார், வேலுாரைச் சேர்ந்த மாரியப்பன், 28 என்பவரை நேற்று கைது செய்தனர்.
ஆட்டோக்களை உடைத்தவருக்கு 'காப்பு'
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, முல்லை காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 28; ஆட்டோ ஓட்டுநர். ஸ்ரீதருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல், 47, என்பவருக்கும் சவாரி ஏற்றுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சக்திவேல், நேற்று கத்தியுடன் ஸ்ரீதர் வீட்டில் வந்து, அவரது மனைவி ஜெனிதாவை மிரட்டியதோடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து தப்பினார். விசாரித்த போலீசார் சக்திவேலை, நேற்று கைது செய்தனர்.
போதை பொருள் வைத்திருந்தோருக்கு 'கம்பி'
அயனாவரம்: அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மண்ணுார்பேட்டை இப்ராஹிம், 26, அயனாவரம் அக்பர் அலி, 36, ஆவடி முகமது பாபுஜி, 36, ஆகியோரை கைது செய்த போலீசார், 37 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள், 2 டூ - வீலர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர் குப்பைமேடு அருகே, கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூர், ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த சங்கேஸ்வரன், 23, கொடுங்கையூர், ஆர்.ஆர்.பிளாக்கைச் சேர்ந்த சசிகுமார், 30, கார்த்திக், 20 ஆகியோரை நேற்று, கைது செய்தனர்.
ஆட்டோ திருடன் கைது
பெரம்பூர்: பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 53. கடந்த 11ம் தேதி மதியம் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது ஆட்டோ, திருட்டு போனது. விசாரித்த செம்பியம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த ஜீவா, 31, என்பவரை நேற்று கைது செய்து, ஆட்டோவையும் மீட்டனர்.

