ADDED : பிப் 05, 2026 06:00 AM

போதையில் தவித்த பெண் மீட்பு
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில், நேற்று முன்தினம் இரவு, தேவா, 24, என்ற நபரும், 20 வயது இளம்பெண்ணும், ஸ்கூட்டரில் அமர்ந்து, மது அருந்தி உள்ளனர். ஒரு கட்டத்தில், இருவருக்கும் தகராறு ஏற்படவே, தேவா, அந்த பெண்ணை அங்கே விட்டு சென்றுள்ளார். தகவலறிந்து அங் கு சென்ற செம்மஞ்சேரி ரோந்து போலீசார், எங்கே செல்வது என தெரியாமல் தவித்த அப்பெண்ணை, பெற் றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். பெண்ணுக்கு மது வாங்கி கொடுத்த தேவாவை போலீசார் தேடுகின்றனர்.
மொபைல் போன் திருடர்கள் கைது
பிராட்வே: கடந்த மாதம் 11ம் தேதி, பிராட்வே பேருந்து நிலையத்தில் தடம் எண் '56டி' பேருந்தில் பயணித்த, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் தாமோதரன், 50, என்பவரின் மொபைல் போன் திருடு போனது. விசாரித்த எஸ்பிளனேடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட பிராட்வேயை சேர்ந்த முரளி, 22, சஞ்சய், 22, வியாசர்பாடி குமார், 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தொழிலாளியின் விரல் துண்டானது
எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள அலுமினிய நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிபவர் உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஷாலம், 35. நேற்று பணியின்போது, இவரது இடது கை மோதிர விரல் மிஷினில் சிக்கி துண்டானது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழில் போட்டியால் மோதல்
வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தமீம் ஷெரிப், 23. அதே பகுதி போஜராஜன் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் இக்பால் என்ற ஜின்பாபா, 50. இருவரும் மாந்திரீக தொழில் செய்து வருகின்றனர். இரு குடும்பத்தினருக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இக்பால், அவரது மகன்கள் சேர்ந்து, தமீம் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி உள்ளனர். வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் திருடர்களுக்கு வலை
பெரம்பூர்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர் பால்வி, 25. இவர், வியாசர்பாடி, கக்கன்ஜி சாலையில் தங்கி, பள்ளியில் பணிபுரிந்தார். பணி முடித்து, நேற்று முன்தினம் மாலை நண்பருடன் தங்கியுள்ள வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூவர், கத்திமுனையில் ராமேஸ்வர் பால்வியின் மொபைல் போனை பறித்து சென்றனர்.
மாதவரம் அருகே ஆண் சடலம் மீட்பு
மாதவரம்: மாதவரம் - ரெட்டேரி செல்லும் 200 அடி சாலையில், காலி மைதானத்தில் நேற்று அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. மாதவரம் போலீசாரின் விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நடுத்திட்டு முகையூரைச் சேர்ந்த சுகுமாரன், 45, என தெரியவந்தது. குடும்ப தகராறு காரணமாக, மனைவி பிரவீனாவுடன் மூன்று நாட்களுக்கு முன் கோபித்து, மாதவரம் ரவுண்டானா பஸ் நிலையம் வந்தவர், தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
'மாவா' விற்ற பெண் சிக்கினார்
பாரிமுனை: பூக்கடை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட 'குட்கா' புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பாரிமுனை, தேவராஜ் முதலி தெருவைச் சேர்ந்த அம்பிகா, 38, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, 3 கிலோ 'மாவா' பொருட்களை பறிமுதல் செய்தனர்.
'சில்மிஷ' வாலிபருக்கு தர்ம அடி
மேடவாக்கம்: மேடவாக்கம், 'அம்பாள் ஸ்டோர்' எனும் கடை அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து வரும் போது, அவருக்கு எதிரே நடந்து வந்த போதை ஆசாமி, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அப்பெண் மற்றும் அப்பகுதியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த நிலையில், போதை ஆசாமி கொலை மிரட்டல் விடுக்கவே, மீண்டும் நையப்புடைத்து அனுப்பினர்.

