ADDED : பிப் 06, 2026 05:52 AM

15 சவரன் திருடிய பணிப்பெண் கைது
சென்னை: பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணகி, 50. சில தினங்களுக்கு முன், இவரது வீட்டில் 15 சவரன் நகைகள் திருடு போயின. பட்டினப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், பணிப்பெண்ணான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா, 55, என்பவர் நகை திருடியதும், அவற்றை விற்று ஆடம்பர பொருட்களை வாங்கி சொந்த ஊரில் குவித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
12 சவரன் செயின் பறித்த வாலிபர் சிக்கினார்
பெரம்பூர்: பெரம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜன், 47. இவர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில், கடந்த 3ம் தேதி இரவு மது அருந்தியுள்ளார். அப்போது, அவருடன் சேர்ந்து மது அருந்தியவருடன் பழக்கம் ஏற்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து, சென்டரல் ரயில் நிலையத்திற்கு இருவரும் ரயிலில் புறப்பட தயாராகினர். அப்போது, செல்வராஜனின் 12 சவரன் செயினை, அந்த வாலிபர் பறித்து தப்பினார். விசாரித்த பெரம்பூர் ரயில்வே போலீசார், திருட்டில் ஈடுபட்ட பாடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த நாராயணன், 26, என்பவரை நேற்று கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.
மொபைல் போன் பறித்தவருக்கு 'கம்பி'
கோயம்பேடு: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா, 21; எலக்ட்ரீஷியன். கடந்த டிச., 31ம் தேதி இரவு, கோயம்பேடு 'ஏ' பிரதான சாலையோரத்தில் அமர்ந்திருந்த இவரை, கம்பியால் தாக்கி மொபைல் போனை இருவர் பறித்து தப்பினர். விசாரித்த கோயம்பேடு போலீசார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், 39, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
போன் திருடிய டெலிவரி ஊழியர் கைது
வளசரவாக்கம்: போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் கீர்த்திராஜ், 31. கடந்த டிச., 8ம் தேதி, கடையில் இருந்த மொபைல் போன் திருடுபோனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த வளசரவாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியரான வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான், 23, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, போனை பறிமுதல் செய்தனர்.
போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடி: திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வகனி, 31. இவரது மனைவி கவிதா, 26. கடன் தொல்லையால், கவிதா சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, செல்வகனி பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கவிதா, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழிப்பறி திருடர்கள் மூவருக்கு 'காப்பு'
பெரம்பூர்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர் பால்வி, 25. இவர், வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். சில தினங்களுக்கு முன், பைக்கில் வந்த மூவர் கத்திமுனையில், ராமேஸ்வரிடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றனர். விசாரித்த செம்பியம் போலீசார், செங்குன்றத்தைச் சேர்ந்த 'யு டியூப்' நாகராஜ், 23, வியாசர்பாடியைச் சேர்ந்த லக்சன், 19, புழலை சேர்ந்த 'லொட்ட' சிவா, 23 ஆகிய மூவரை, கைது செய்தனர். இதில், நாகராஜ் மீது 21 வழக்குகள் உள்ளன.
போதை மாத்திரை விற்ற ஓட்டுநர்கள் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: கே.கே.நகர், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராமாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சதாம் உசேன், 26, என்பவரை கைது செய்த போலீசார், போதைக்காக பயன்படுத்தும் 15 மாத்திரைகள், 10 சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.
கிண்டி பகுதியில் ஆட்டோவில் வைத்து, கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான லோகேஷ், 23, என்பவரை கைது செய்த அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 2 கிலோ கஞ்சா, 56 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற பெண் உட்பட 7 பேர் சிக்கினர்
ஓட்டேரி: ஓட்டேரி, ஜமாலியா பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த முகமது கலில், 32, ராஜேஷ்குமார், 42, ஆகியோரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொடுங்கையூர், சின்னாண்டி மடம் சந்திப்பில் நேற்று மதியம், கஞ்சா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட சபரிஸ்ரீ, 21, மூலக்கடை ஜெகன், 36, ஓட்டேரியை சேர்ந்த அலமேலு, 28, ஆகிய மூவரையும் கைது செய்தனர். 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, வியாசர்பாடி, முத்து தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிவா, 39, தமிழ்செல்வன், 30, ஆகிய இருவரை, வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி திருடர்களுக்கு தர்ம அடி
மாதவரம்: மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில், நேற்று மாலை மொபைல் போன் பறித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன், 25 மற்றும் அஞ்சு, 24, ஆகியோரை, பயணியர் பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், இருவரும் பேருந்து நிலையத்தில் பயணியரின் பொருட்களை திருடுவதும், வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

