ADDED : ஏப் 26, 2026 01:16 AM
ஜூஸ் கடையில் வீண் தகராறு கத்தியால் தாக்கியவர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 33. இவரது அக்கா, அதே பகுதியில் உள்ள கே.கே., சாலையில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, 27 என்பவர், ஜூஸ் குடித்து, பணம் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி, கண்ணாடி டம்ளர்களை உடைத்துள்ளார். அப்போது கடைக்கு வந்த முத்துசாமியிடம் தகராறு செய்து, கத்தியால் வெட்டி தப்பினார். இது குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், கார்த்திக் ராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இருதரப்பு மோதல் வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'
எம்.ஜி.ஆர்., நகர்: மேற்கு ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் பாலாஜி, 18; கல்லுாரி மாணவர். பாலாஜி மற்றும் அவரது நண்பர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
கடந்த 29ம் தேதி பாலாஜி மற்றும் அவரது நண்பர்களிடம், அகஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் வீண் தகராறு செய்து, கத்தி, உருட்டு கட்டையால், தாக்கி தப்பினர். இது குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், அகஸ்டின், தினேஷ் குமார், கிருஷ்ணா ஆகிய மூவரை, கடந்த 30ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த நவீன் சஞ்ஜய், 21, சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த சரவணன், 20 ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
பூ வியாபாரியை தாக்கிய வாலிபர்கள் 3 பேர் கைது
திரு.வி.க., நகர்: திரு.வி.க., நகர், இந்திரா தெருவைச் சேர்ந்தவர் முருகன், 46; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் சாப்பிட்டு விட்டு, தன் வீட்டின் அருகே சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மூன்று பேர் முருகனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் இல்லை என மறுக்கவே, முருகனை சரமாரியாக தாக்கி தப்பினர்.
அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்து விசாரித்த திரு.வி.க நகர் போலீசார், திரு.வி.க., நகர் எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த 'புறா' விஜய், 20. தீபக்குமார், 26, கோபி கிருஷ்ணா, 19 ஆகிய மூவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாமியார்,- மருமகனை தாக்கிய ஆசாமி கைது
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் கற்பகம், 55. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, போதையில் அங்கு வந்த எதிர் வீட்டுக்காரர் கோபால், 29, கற்பகத்திடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளார். இது குறித்து, அவரது மருமகன் சங்கர் குமார் தட்டிக்கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த போதை ஆசாமி, உருட்டு கட்டையால் சங்கர் குமாரையும் பலமாக தாக்கியுள்ளார். இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோபாலை கைது செய்தனர்.
