ADDED : ஜூன் 05, 2026 04:19 AM

பசு திருடர்களுக்கு தர்ம அடி
ஆவடி: அயப்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணா, 51, என்ற பால் வியாபாரிக்கு சொந்தமான மூன்று பசுக்கன்றுகள், வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு படுத்திருந்தன.
நள்ளிரவில், மூன்று கன்றுகளையும் ஆட்டோவில் கடத்தி செல்வது தெரிந்து, இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று, மக்கள் பிடித்தனர்.
ஆட்டோவில் இருந்த நொளம்பூரைச் சேர்ந்த ஆனந்த், 30, நரேந்திரன், 36, ஆகிய இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். அயப்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
திரு.வி.க., நகர்: திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்தார்.
தனிப்படை போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. விசாரணையில், பெரம்பூர், வாசுதேவன் நகரைச் சேர்ந்த அப்துல் ஆசீம், 32, என்பது தெரிய வந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், மனைவியை பிரிந்து ஆறு மாதங்களாக தனியாக வசிக்கும் அப்துல் ஆசீம், தன் புகார் மனுவை போலீசார் முறையாக விசாரிக்காததால் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
--
வீட்டில் 55 சவரன் நகை மாயம்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்தவர் சுதாகர், 47; தன் வீட்டின் முன்பகுதியில், மளிகை கடை வைத்துள்ளார். தன் வீட்டு அலமாரியில் வைத்திருந்த, 55 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் திருடியுள்ளதாக, திருத்தணி போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
