ADDED : ஜூன் 08, 2026 02:03 AM

லோடு வாகனம் மோதி ஓட்டுநர் பலி
ஆவடி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார், 23. நேற்று மதியம் 'அசோக் லேலண்ட் தோஸ்த்' சரக்கு வாகனத்தில், லோடு ஏற்றுவதற்கு வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
காட்டூர் சிப்காட் அருகே, சாலையோரம் பழுதாகி நிறுத்தப்பட்ட டிரைலர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
வி.ஏ.ஓ.,வை தாக்கிய 2 பேர் கைது
குன்றத்துார்: குன்றத்துார் அடுத்த கோவூரைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், 35, சதாசிவம், 30. இவர்கள் பயன்படுத்தி வந்த நிலம், வேறு ஒருவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவூர் வி.ஏ.ஓ., செல்வகுமாரை நேற்று முன்தினம் சந்தித்து, விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வி.ஏ.ஓ.,வை தாக்கியதாக கூறப்படுகிறது. வி.ஏ.ஓ., புகாரின்படி, மாங்காடு போலீசார் விசாரித்து, மோகன்ராஜ், சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர்.
'கைவரிசை' காட்டிய மூவருக்கு 'காப்பு'
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், மோகனபுரி நான்காவது தெருவைச் சேர்ந்தவர் முருகப்பன், 56. இவரது வீட்டில் 2.5 சவரன் நகை மாயமானது. போலீசார் விசாரித்து, ஆறு மாதங்களுக்கு முன் வீட்டில் பணிபுரிந்த கிரேசி, 27, நகை திருடியது தெரிந்தது. அவரையும், அவருக்கு உதவிய கணவர் விஜய லாரன்ஸ், 24, மற்றும் நண்பர் சக்தி, 24, ஆகியோரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.
மணமான பெண்ணுக்கு தொல்லை
சென்னை: ராயப்பேட்டையைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் நரேஷ், 24, என்பவர் பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்த புகாரையடுத்து, ஐஸ்ஹவுஸ் போலீசார், நரேஷை நேற்று கைது செய்தனர்.
படப்பை அடுத்த சாலமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார், 60; எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமியிடம், பாலியல் சீண்டல் செய்துள்ளார். கூடுவாஞ்சேரி மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில் கிருஷ்ணகுமாரை, நேற்று கைது செய்தனர்.
அலையில் சிக்கி இளைஞர் மாயம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், திருநகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் ஐசக், 19; புதுவண்ணாரப்பேட்டை, அரசு ஐ.டி.ஐ., கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர். நேற்று விடுமுறை தினம் என்பதால், தாய் பாபி, சகோதரியர் கிரேசி, எல்சி மற்றும் பெல்சி ஆகியோருடன், திருவொற்றியூர் கே.வி.கே., குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றார். அலையில் சிக்கிய ஐசக் மாயமானார். இருள் சூழ்ந்ததால், அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
