ADDED : ஜூன் 20, 2026 03:43 AM

விபத்தில் முதியவர் பலி
சித்தாலபாக்கம்: சித்தாலபாக்கம், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த பெருமாள், 65, அரசன்கழனி கிராமம் அருகே, கடந்த 17ம் தேதி சைக்கிளில் சென்றார்.
பின்னால் வேகமாக வந்த பைக் மோதியதில் காயமடைந்த பெருமாள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று அதிகாலை இறந்தார். பைக் ஓட்டிய அரிஷ்குமார், 19, என்ற வடமாநில வாலிபரும் காயம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கான்கிரீட் பூச்சு விழுந்து மூதாட்டி காயம்
தாம்பரம்: கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் குட்டியம்மாள், 59. நேற்று முன்தினம் இரவு, மகளுடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டு கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், குட்டியம்மாள் காயமடைந்தார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு
பெரம்பூர்: புதுாரில் நேற்று புறப்பட்ட தடம் எண் '48பி' மாநகர பேருந்து, மின்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது. டி.பி., மருத்துவமனை நிறுத்தத்தில் இருந்து கிளம்பியபோது, பேருந்தின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.
புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா ஆயில் விற்ற இருவர் சிக்கினர்
வானகரம்: வானகரம், அடையாளம்பட்டு மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில், ஆட்டோவில் வைத்து கஞ்சா ஆயில் விற்ற, பூந்தமல்லி சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். அவர் தந்த தகவலையடுத்து, மண்ணுார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய், 20, என்பவரையும் கைது செய்தனர்.
இருவரிடமிருந்து மொத்தம் 3 கிராம் கஞ்சா ஆயில், 32 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
லஞ்சம்: மின் வணிக ஆய்வாளர் கைது
திருவேற்காடு: வானகரத்தை சேர்ந்த ரமேஷ்குமார், 40, கோலடி பகுதியில் புதிதாக வீடு கட்ட தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்தார்.
திருவேற்காடு மின் வாரிய வணிக ஆய்வாளர் ஜமாலுதீன், 45, லஞ்சம் கேட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 15,000 ரூபாய் மதிப்புடைய நோட்டுகளை ரமேஷிடம், ஒப்பந்த ஊழியர் வினோத், 45, வாங்கி, ஜமாலுதீனிடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக இருவரையும் கைது செய்தனர்.
