ADDED : ஜூலை 06, 2026 02:42 AM

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
குரோம்பேட்டை: பல்லாவரம் அடுத்த நாகல்கேணியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 21. இவர், நேற்று அதிகாலை 1:30 மணியளவில் தன் 'யமஹாஆர்15' பைக்கில், நண்பர் பரூக் பாஷா, 22, என்பவருடன், தாம்பரத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஜி.எஸ்.டி., சாலையில் குரோம்பேட்டை பகுதியை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து இருவரும் விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பரூக் பாஷா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூ.68 லட்சம் குட்கா பறிமுதல்
புழல்: போதை பொருளான குட்காவை கடத்திய வழக்கில், கடந்த 29ம் தேதி நான்கு பேர் கைதாகினர். அவர்களது தகவலின்படி, வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த ரோனக் சிங், 25, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இரண்டு கார்களில், 340 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 68 லட்சம் ரூபாய்.
ஆயிரம்விளக்கு பகுதியில் முகமது அனஸ், 29, கோடம்பாக்கத்தில் பாரதிதாசன், 59, மணி, 48, தினேஷ், 34, ஆகியோர், குட்கா பொருட்களை விற்று வந்தனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மணலிபுதுநகரில், காரில் கடத்தில் வரப்பட்ட, 60 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டை சேர்ந்த துாசிமுத்து, 60, செங்குன்றத்தைச் சேர்ந்த ரமேஷ், 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைகீழாக கவிழ்ந்த கார்
ராயப்பேட்டை: ராயப்பேட்டையைச் சேர்ந்த அப்ரடி முகமது, 29, ஓட்டிய 'ஸ்விப்ட் டிசையர்' கார், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் அருகே, 'யு' வளைவில், டாக்டர் பெசன்ட் சாலைக்கு திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்ரடி முகமதுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மகளிடம் அத்துமீறல்; தந்தைக்கு வலை
தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தை, இரண்டு ஆண்டுகளாக மகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து, குழந்தைகள் உதவிக்கான '1098' எண்ணை தொடர்பு கொண்டு மகள் புகார் அளித்தார். குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள், சிறுமியை மீட்டு, அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
தாம்பரம் மகளிர் போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தந்தையை தேடி வருகின்றனர்.
