ADDED : ஜூலை 16, 2026 04:30 AM
தி.மு.க., பிரமுகர் மகனுக்கு சரமாரி வெட்டு
எண்ணுார்: எண்ணுார், காமராஜர் நகரை சேர்ந்த தி.மு.க., மேற்கு பகுதி அவை தலைவர் திருசங்குவின் மகன் ஸ்ரீகணேஷ், 29. தாமரை குளமருகே நேற்று, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, நண்பர்கள் சேர்ந்து கத்தியால் ஸ்ரீகணேஷின் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டி தப்பினர். தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகணேஷுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லாரியில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு
குன்றத்துார்: சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டைக்கு, 'பேஷன் ப்ரோ' பைக்கில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்பாபு, 45, கன்டெய்னர் லாரியை முந்த முயன்று தடுமாறி விழுந்ததில், லாரி டயரில் சிக்கி இறந்தார். டயரில் இருந்து உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. கிரேன் உதவியுடன் லாரியை துாக்கி, உடல் மீட்கப்பட்டது.
பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்
சென்னை: ராயப்பேட்டை கதீட்ரல் சாலை, மெரினா கடற்கரை நோக்கி பைக் ரேஸ் அடாவடியில் ஈடுபட்ட சிலர் குறித்து மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரித்தனர். இதில் பைக் ரேஸ் அடாவடியில் ஈடுபட்ட ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த தணிகைவேல், 19, பூந்தமல்லி சந்தோஷ், 19, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். கே.டி.எம்., யமஹா ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல் குண்டு வீசியவருக்கு 'காப்பு'
பல்லாவரம்: பல்லாவரம், மங்கலபுரத்தில் தன் வீட்டு முன் நின்றிருந்த அருண்பாண்டி, 50, என்பவரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழரசன், 30, மது அருந்த 100 ரூபாய் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், பைக்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, பெட்ரோல் குண்டு தயாரித்து அருண்பாண்டி வீட்டின் மீது, நேற்று முன்தினம் இரவு தமிழரசன் வீசினார். பலத்த சத்தத்துடன் வெடித்தது; யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல்லாவரம் போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.
பெண் துாய்மை பணியாளர் பலி
பரங்கிமலை: குன்றத்துார் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 58; கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக்பார்க்கில் துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து பரங்கிமலை பால்வெல் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மோதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் பரசுராமை, 34, போலீசார் நேற்று கைது செய்தனர்.
கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு
தாம்பரம்: தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோவில் முதல் தெருவில் வசிக்கும் மத்தியாஸ் பீட்டர் ஆண்டனி, 46, தன் 'டாடா பன்ச்' காரில் ஏழு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். நேற்று முன்தினம், தாம்பரம் அருகே டீ குடித்துவிட்டு வருவதற்குள், கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள் திருடியுள்ளனர். வீடு விற்ற பணம் என, தாம்பரம் போலீசில் தெரிவித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
சாட்சியை மிரட்டிய ரவுடிக்கு 'காப்பு'
சென்னை: பாரிமுனையைச் சேர்ந்த பூபதி, 23, கடந்த 2024ல் வழிப்பறி வழக்கில் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக, சென்னை கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நேற்று ஆஜரானார். இவ்வழக்கின் சாட்சியான மயிலாப்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை, கொலை செய்வதாக பூபதி மிரட்டினார். வடக்கு கடற்கரை போலீசார், பூபதியை மற்றொரு வழக்கில் கைது செய்தனர்.
மதுக்கூடத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் ஒரு குவார்ட்டர் மது பாட்டில் வாங்கி, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த இருவரை தேடி, பலரும் வந்து சென்றுள்ளனர்.
தகவலின்படி அங்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், இருவரும் கஞ்சா விற்றது தெரிய வந்தது. செம்மஞ்சேரியைச் சேர்ந்த காமேஸ்வரன், 25, லோகேஷ், 26, ஆகியோரை கைது செய்து போலீசார், 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
'ஏசி'யில் காப்பர் கம்பிகள் திருட்டு
தாம்பரம்: தாம்பரம், சுந்தரம் காலனியைச் சேர்ந்த ஜெயந்த் என்பவரின் வீட்டில், 'ஏசி'யின் காப்பர் கம்பிகளை, நேற்று முன்தினம், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், அப்பகுதியில் பல வீடுகளில் 'ஏசி' காப்பர் வடம் தொடர்ந்து திருடப்படுவதால, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
